சென்னையில் நாளை முதல் அதிகனமழை - கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
அதி கனமழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெய்த அதிகனமழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கனமழை வெள்ளம்
தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி 27 செ.மீ, திருச்செந்தூர் 25 செ.மீ. நாகை 19, ஸ்ரீவைகுண்டம் 18, குலசேகரபட்டினம் 16, வைப்பாறில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கடலோர மாவட்டங்கள்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

ஆரஞ்ச் அலர்ட்
இதே போல திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடிமின்னலுடன் மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 27ஆம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி ராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி கரூர் நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பிற பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
Recommended Video

சூறாவளி வீசும்
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.எனவே 26,27 தேதிகளில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications