குஜராத் அரசை பாருங்க! முஸ்லிம் ஆயுள் கைதிகள் இருக்காங்களே.. தமிழ்நாடு அரசை விடாமல் விரட்டும் விசிக
சென்னை: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது குழந்தை உட்பட 7 பேரை கொன்ற 11 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த நிலையில், அவர்களை குஜராத் அரசு விடுவித்ததைபோல், தமிழ்நாடு அரசு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் வன்னியரசு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குஜராத் இனப்படுகொலையின் போது 19 வயது பில்கிஸ் பானோ 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, அவரது 3 வயது மகள் உள்பட 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 11 பேரை நேற்று விடுவித்தது குஜராத் அரசு.

ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகள் பூர்த்தி செய்தது, வயது, குற்றத்தின்தன்மை, சிறையில் நன்நடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிறை அறிவுரை குழுவின் பரிந்துரை படி விடுவிக்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநில கூடுதல் தலைமை செயலாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
11 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் மனுக்களை பரிசீலித்து, சிறை அறிவுரைகுழு அவர்களை விடுவிக்கலாம் என மாநில அரசுக்கு பரிந்துரை அனுப்பியது. இதே அணுகுமுறையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பத்தாண்டுகள் கழித்த ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்ய கணக்கெடுத்து நீண்ட நாள் ஆகிவிட்டது.
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறோம்." என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடனே 7 தமிழர்களுடன் கோவை இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
அதேபோல் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட வழிகாட்டு நெறிகளால் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இதற்கு எதிராக குரல் எழுப்பியதுடன், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைகோரி நடத்தப்பட்ட போராட்டங்களிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications