சென்னை மக்களே உஷார்.. வாகன நம்பர் பிளேட்டை உடனே பாருங்க! இல்லைனா ‛ஃபைன்’ விழும்.. போலீஸ் ‛வார்னிங்’
சென்னை: சென்னையில் வாகன ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளனர். அதாவது வாகன பதிவெண் பலகையில் தங்களின் பணியை குறிக்கும் வகையிலான ஸ்டிக்கர்களை உடனே நீக்க காலஅவகாசம் வழங்கி உள்ளனர். இந்த காலஅவகாசத்துக்குள் வாகன பதிவெண் பலகையில் உள்ள ஸ்டிக்கரை நீக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாற்றும் நபர்கள் தாங்கள் வேலை செய்யும் துறைகளின் பெயர்கள் மற்றும் அதற்கான லோகோவை ஸ்டிக்கர்களாக தங்களின் வாகனங்களில் ஓட்டுகின்றனர்.

இந்நிலையில் தான் வாகனங்களின் முன்பகுதி மற்றும் நம்பர் பிளேட்டுகளில் இத்தகைய ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மே 2ம் தேதி முதல் அபராதம் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் வாகனங்களின் வாகன எண் பலகையில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள்/குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனிநபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கள் பரவலான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமை செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல்துறை உள்பட முப்படை போன்ற துறைகள்/ நிறுவனங்களின் பெயர்களை காணலாம். இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் பலகையிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/ எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது.
கூடுதலாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள். இதுதவிர பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உண்மையின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக சாலையை பயன்படுத்துபவர்களை எச்சரித்தும், இம்முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய மே மாதம் 1ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது.
மேலும் இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வருகின்றன மே மாதம் 2ம் தேதி எம்வி சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு மோட்டார் வாகனத்தின் அங்கீகரிக்கப்படாத குறியீடு பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும். மேலும் வாகன எண் பலகையில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் எம்வி விதி 50 யூ/எஸ் 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications