40 கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி படப்பை குணா கோர்ட்டில் திடீர் சரண்!
சென்னை: சென்னை புறநகரில் 40க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா இன்று திடீரென சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொலை, கொள்ளை வழக்குகளில் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் படப்பை குணா. சென்னை புறநகர்களில் போலீசாருக்கு சவால்விடும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு குலைநடுங்க வைத்தவர் ரவுடி குணா.
கூலிப்படை தலைவன் படப்பை குணா மனைவி உட்பட 6 பேர் போலீஸ் விசாரணைக்கு பின் விடுவிப்பு
குணாவின் பூர்வோத்திரம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.
குணாவை தேடும் நடவடிக்கை
படப்பை குணாவை கைது செய்ய போலீசார் முடிவெடுத்தனர். இதனை அறிந்து படப்பை குணா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். படப்பை குணாவை என்கவுண்ட்டர் செய்யும் முடிவில் போலீசார் இருப்பதாக கூறப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மனைவியிடம் விசாரணை
குணா தலைமறைவாக இருப்பதால் அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9 -ம் தேதி அதிகாலை கூடுதல் எஸ்பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். படப்பை குணா தவறு செய்ய, தலைமறைவாக ஒரு சில போலீசாரே உடைந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் படப்பை குணாவிற்கு உதவியதாக 3 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டார்.
மனைவி வழக்கு
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள், வழக்குகளில் சரணடைய எனது கணவர் தயாராக உள்ளார். புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுண்டர் செய்யப்படலாம் என்கிற அச்சம் இருக்கிறது என்று கூறினார். இதனை போலீசார் மறுத்தனர்; ரவுடி குணாவை என்கவுண்ட்டர் செய்யும் திட்டம் இல்லை; சட்டப்படியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என்றார். இதனால் எல்லம்மாளின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குணா திடீர் சரண்
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரவுடி குணா இன்று சரணடைந்தார். ரவுடி குணாவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.