ரயில்வே தேர்வில் அட்டூழியம்-தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்- வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: ரயில்வே தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
நீட், ரயில்வே என எந்த ஒரு தேர்வு நடத்தப்பட்டாலும் தமிழக மாணவர்களை பந்தாட வைப்பது வாடிக்கையாகிவிட்டது. நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கான தேர்வு மையத்தை ராஜஸ்தானில் போட்ட கொடுமையும் நிகழ்ந்தது. இதேபோல தற்போது ரயில்வே தேர்வுக்கான தேர்வு மையங்கள் அண்டை மாநிலங்களில் போடப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மே 9-ல் தேர்வு
ரயில்வேயில் மொத்தம் 24,1649 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 2.5 கோடி பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இப்பணியிடங்களுக்கான தேர்வுகள் மே 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெறப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் தேர்வு மையம்
அப்படி ஹால்டிக்கெட் பெற்ற தமிழக விண்ணப்பதாரர்கள் பலருக்கும் கடும் அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஈரோட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஒருவருக்கு கர்நாடகா மாநிலம் உடுப்பியில் தேர்வு மையம் போடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக @mselvan90 என்ற நெட்டிசன் தமது ட்விட்டர் பக்கத்தில், மதுரையை சேர்ந்த தமது சகோதரருக்கு கர்நாடகாவின் ஷிமோகாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தயவு செய்து மாற்றித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில்வேக்கு கண்டனம்
இதேபோல் ஈரோட்டைச் சேர்ந்த தேர்வர் ஒருவருக்கு ஆந்திராவின் நெல்லூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.ரயில்வே துறையின் இந்த அடாவடித்தனத்தால் தமிழக தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளனர். சமூக வலைதளங்களில் ரயில்வே துறையின் இப்போக்குக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரவிக்குமார் ட்வீட்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், ரயில்வே நிர்வாகத்தின் இத்தகைய அணுகுமுறை சரியானது அல்ல. தமிழக விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications