சென்னையில் பகீர்.. சொகுசு காரில் இருந்த ரூ.1 கோடி போதைப்பொருள்.. 4 பேரை தூக்கிய போலீசார்!
சென்னை: சென்னையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை உக்கடம் பகுதியில் இளைஞர்கள் பலர் போதை ஊசி பயன்படுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சென்னையிலும் விலை உயர்ந்த போதை பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் தொடர்ந்து வந்தன.

காரில் சோதனை
இதன் பின்னர் சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்தது திருவல்லிகேணியை சேர்ந்த அஜ்மல் கான் (22) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் அவரது காரை போலீசார் சோதனையிட்டனர்.

விலை உயர்ந்த போதைப்பொருள்
அப்போது காரில் மெத்தபெட்டமைன்' என்ற விலை உயர்ந்த போதைப்பொருள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அஜ்மல்கானை கைது செய்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் போதைப்பொருள் கடத்தி விற்கும் கும்பலை சேர்ந்த ராயபுரத்தைச் சேர்ந்த பஷீர் அகமது (47) என்பவர் வெளிநாடுகளில் இருந்து போதை பொருளை கடத்தி வந்துள்ளார்.

ரூ.1 கோடி மதிப்பு
பெரம்பூரைச் சேர்ந்த அப்துல் கலிக் (48), சேப்பாக்கத்தை சேர்ந்த சேட்டு முகமது (47) ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டு சென்னையில் போதைப் பொருளை விற்று வந்துள்ளனர். இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 1 கிலோ 360 கிராம் 'மெத்தபெட்டமைன்' போதை பவுடர், ரூ.1 லட்சத்து 22 ஆயிரம், 2 கார்கள், 1 மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரசுக்கு கோரிக்கை
இந்த கும்பல் 1 கிராம் எடையுள்ள பவுடரை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதேபோல் சோதனையை நடத்தி போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications