வாகன சோதனையில் ரூ.12.8 கோடி பறிமுதல்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.12.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.3.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.20 லட்சம், சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிகளை மீறியதாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் சோதனைசாவடியில் தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணமின்றி 250 நெல்மூட்டைகள் ஏற்றி செல்வது தெரிந்தது.

ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான நெல்மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல், உரிய ஆவணமின்றி பால் வியாபாரி கொண்டு வந்த 61 ஆயிரத்து 310 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக புகார் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications