ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: உதவி ஆய்வாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்களான ராஜா சிங் மற்றும் சன்னிலாய்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ராயபுரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர்கள் ராஜாசிங் மற்றும் சன்னிலாய்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 80 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில், ராஜா சிங் மற்றும் சன்னி லாய்டு இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சன்னி லாய்டு மற்றும் ராஜா சிங் இருவருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications