ஒன்னும் அவசரம் இல்லீங்க.. ரூ 2500 பரிசுத் தொகை பொங்கலுக்கு பிறகும் பெறலாம்.. அமைச்சர் செல்லூரார்
சென்னை: பொங்கல் பரிசுத் தொகையை பண்டிகைக்கு பின்பும் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவையுடன் வேட்டி, புடவை வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் தொடங்கி வைத்தார்.
அந்த திட்டம் இன்னமும் தொடர்கிறது. இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பொங்கலுக்கு மேற்கண்ட பொருட்களுடன் ரூ 1000 ரொக்கப்பணமும் பரிசாக வழங்கப்பட்டது. இது நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக வழங்கும் முன்பணம் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ரேஷன் கடை
எனினும் அந்த பணம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அடுத்து ரேஷன் கடைகளில் ரூ 1000 வழங்கப்பட்டது. தற்போது 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
பரிசுப் பொருள்
இந்த பரிசுத் தொகை வரும் 4-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதற்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படுகிறது. காலை 100 பேர், மாலை 100ப பேர் என டோக்கன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிகளில் அந்த நேரங்களில் போய் பரிசுப் பொருளை பெற்றுக் கொள்ளலாம்.
ரேஷன் கடை
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அதாவது டோக்கன் பெற்ற தேதிகளில் வர முடியாதவர்கள் பொங்கலுக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் ஜனவரி 4-ஆம் தேதி முதல் பரிசுத் தொகையை மக்கள் ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம்.
மாலை 100 பேர்
காலை 100 பேர், மாலை 100 பேர் என பொங்கல் பரிசை பெறலாம். பொங்கலுக்குள் பெறாதவர்கள் வரும் 18-ஆம் தேதி பொங்கல் பரிசை பெறலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது போல் டோக்கன் பிரித்து கொடுத்ததன் மூலம் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்.