திமுகவில் சீனியர்கள் ஆதங்கம்? சலசலப்பை ஏற்படுத்திய பேச்சு பற்றி ஆர்எஸ்.பாரதி விளக்கம்! பின்னணி என்ன?
சென்னை : எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் எளிதாக பதவி கிடைக்காது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்ற வகையிலேயே பேசியதாக விளக்கியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.
கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு முதுகில் குத்திவிட்டுச் சென்றவர்கள் பின்னால் வந்து கொஞ்சுவார்கள், அதையெல்லாம் பார்க்கும்போது ஆதங்கமாகத்தான் இருக்கும். அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் தொடர வேண்டும் வேண்டும் எனப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி, புதியவர்களுக்கு பதவி கிடைப்பது பற்றிப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுக வட்டாரத்தி்ல் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அதுபற்றி விளக்கியுள்ள ஆர்.எஸ்.பாரதி, ஒரே கட்சி, ஒரே கொடி என பொறுமையாக இருந்தால், உங்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தான் பேசினேன் என விளக்கம் அளித்துள்ளார்.
ஏதோ என்னால முடிஞ்சத செய்றேன்.. நான் என்ன எம்பியா..எம்எல்ஏவா? ஓபானாகப் பேசிய மதிமுக துரை வைகோ!
ஆர்.எஸ்.பாரதி
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி தற்போது திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார். 1896ஆம் ஆண்டு முதல் ஆலந்தூர் நகர்மன்றத் தலைவராக தொடர்ச்சியாக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதாவை திணறடித்த டான்சி ஊழல் வழக்கைத் தொடர்ந்தவர் இவரே. முதல்முறையாக 2016 ஆண்டு முதல் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்த இவரது பதவி காலம் கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்த நிலையில் மீண்டும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆர்.எஸ்.பாரதி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இந்நிலையில் தான் திமுகவில் பதவிகள் வழங்கப்படுவது பற்றி அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதியவர்களுக்கு பதவி
திமுகவில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவது பாரம்பரிய திமுகவினர் மத்தியில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததுதான். அதிலும், தற்போதைய அமைச்சரவையில் கால்வாசிப் பேர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள், கட்சியின் முக்கிய பதவிகளிலும் மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களே கோலோச்சி வருவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. சமீபத்திய நிர்வாகிகள் நியமனத்திலும், சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தவர்களுக்கெல்லாம் மாநில பொறுப்புகள் வழங்கப்பட்டது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆதங்கம்
இந்த பின்னணியில் தான் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை, திமுகவில் காலங்காலமாக பணியாற்றி வருபவர்கள் தங்களின் ஆதங்கமாகவே எடுத்துக் கொண்டனர். மறைந்த முன்னாள் தி.மு.க எம்.பி ஜின்னாவின் படத்திறப்பு விழா சென்னை ஆர்.எஸ்.புரத்தில் திமுக சட்டத்துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போதுதான் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த விஷயத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.
எங்களுக்கு பின்னால் வந்தவர்கள்
அப்போது, கட்சி என்று வந்து விட்டால் பதவி வருகிறதோ, இல்லையோ கடைசி வரை அந்தக் கட்சியில் இருப்பவன்தான் விசுவாசமான தொண்டன். அதுபோல எல்லோரும் இருக்க வேண்டும். எங்களோடு ஆரம்ப காலத்தில் இருந்தவர்களில் சிலர்தான் தற்போது உள்ளோம். மற்றவர்கள் வந்தனர், சென்றனர். எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ, எம்.பி ஆகி விட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது. அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். திமுகவில் உழைத்தவர்களுக்கு நிச்சயம் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ஒரே கொடி ஒரே லட்சியம்
நான், ஜின்னா போன்றவர்கள் கட்சியில் பொறுமையாக இருந்தோம். அவருக்கு மேல்சபை எம்.பி பதவி 68 வயதில் கிடைத்தது. எனக்கும் அதே போல 69 வயதில் ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் உடனே தங்களுக்கு பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே லட்சியத்துடன் இருக்கும் தொண்டர்களுக்கு என்றைக்கும் மரியாதை உண்டு. கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர், வைகோ போன்றவர்கள் விலகி சென்ற நெருக்கடியான காலத்தில் கட்சிக்கு உறுதுணையாக இருந்தோம். பாதை மாறவில்லை. எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தோம்.
கொஞ்சுவார்கள்
கட்சியில் துரோகம் செய்துவிட்டு முதுகில் குத்திவிட்டு சென்றவர்கள் பின்னால் வந்து கொஞ்சுவார்கள். அதனால் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம். கட்சியில் எவ்வளோ கஷ்டப்பட்டாலும் நம்மளை ஒதுக்கிவிடுவார்கள். அதையெல்லாம் சகித்துக்கொண்டு கட்சியில் ஒரு தொண்டனாக இருக்கவேண்டும். பதவி ஒருநாள் அதுவாகவே கிடைக்கும்" எனப் பேசினார்.
ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சில் குறிப்பிட்ட சில விஷயங்கள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். "திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை, புதிதாக வந்தவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள் என நான் கூறவில்லை. அது திரித்துக் கூறப்பட்டுள்ளது. திமுக எம்.பி ஜின்னா படத் திறப்பு நிகழ்ச்சி, கட்சியின் வழக்கறிஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நான் பேசியபோது, சில பேருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் வருத்தம் இருக்கும். அது நியாயமானது தான். ஆனால், ஒரே கட்சி, ஒரே கொடி என பொறுமையாக இருந்தால், உங்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தான் பேசினேன்.
எல்லாக் கட்சியிலும்
நாங்கள் கட்சியில் கொண்டு வந்து சேர்த்தவர்களுக்கெல்லாம் பதவிகள் கிடைத்தாலும் எங்களுக்கு கிடைக்கவில்லையே என விலகிவிடவில்லை, பொறுமையாக இருந்தோம், எங்களுக்கும் பதவி கிடைத்தது, அரசியல் இப்படித்தான் இருக்கும், பொறுமையாக இருக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். பாஜகவில் எல்.முருகன், அண்ணாமலை போன்றோருக்கு சேர்ந்ததுமே பதவி கிடைத்ததே. சீனியரான அத்வானி இருக்கும்போது மோடி பிரதமரானாரே.. எல்லாக் கட்சியிலும் தான் இது இருக்கும்" என ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.