திரும்ப திரும்ப அவதூறு.. சுதந்திரப் போராட்டத்தில் பிறந்த இயக்கம்தான் ஆர்எஸ்எஸ்.. வானதி சீனிவாசன்!
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆங்கிலேயர்களுக்கு உதவியாகவே இருந்தது என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் பாஜகவுக்கு எதிராகத் தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, காஷ்மீரில் நிறைவு செய்கிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் பாத யாத்திரையை முடித்துள்ள நிலையில், தற்போது கர்நாடகாவில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

ராகுல் காந்தி பேச்சு
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், எனக்குத் தெரிந்த வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆங்கிலேயர்களுக்கு உதவியாகவே இருந்து வந்தது. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித்தொகை பெற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை. இதுபோன்ற உண்மைகளை பாஜகவால் மறைக்க முடியாது என்று நேரடியாக விமர்சித்தார்.

வானதி சீனிவாசன் கண்டனம்
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகாவில் 'பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்கு என்ன என்பதை எங்கும் கண்டுபிடிக்க முடியாது. ஆங்கிலேயர்களுக்கு ஆர்எஸ்எஸ் உதவி செய்தது" என கூறியிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டம்
ஆர்எஸ்எஸ் என்ற இயக்கம் பிறந்ததே சுதந்திரப் போராட்டத்தில்தான். 1925ல் ஆர்எஸ்எஸ்-ஐ தொடங்கிய கேசவ பலிராம் ஹெட்கேவார், மாகாண காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்தவர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே, புரட்சி இயக்கங்களில் இணைந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். 1925ல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது. 1947ல் சுதந்திரம் கிடைத்தது. மாணவர்களை கொண்டுதான், ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ்-ஐ பெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார். ஆனாலும், ஆர்எஸ்எஸ்-ல் இருந்த பலரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்தான்.

சுதந்திரத்திஸ் ஆர்எஸ்எஸ் பங்கு
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு தொடர்பு இல்லை என திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் இருந்த, பண்டிட் நேரு அமைச்சரவையில் இருந்த சியாம பிரசாத் முகர்ஜிதான், ஜன சங்கத்தை தொடங்கினார். விடுதலைக்குப் பிறகு தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளை தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸில் இருந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்தான்.

ராகுல் எண்ணம் நடக்காது
இடத்திற்கு இடம் ஒரே வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி, எப்படியாவது தேர்தலில் வென்றுவிடலாம் என நினைத்து பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. இந்திய மக்களின் பண்பாடு, கலாசாரத்திற்கு, உணர்வுகளுக்கு எதிரான சிந்தனை கொண்ட ராகுல் காந்தியால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications