உத்தரவு ஏற்புடையதல்ல.. “அமைதி”யாக ஊர்வலம் நடத்துகிறோம்! தமிழ்நாடு அணிவகுப்பை ஒத்திவைத்த ஆர்எஸ்எஸ்
சென்னை: நவம்பர் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் 44 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் அதை அந்த அமைப்பு ஒத்திவைத்துள்ளது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்தது. இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிடகோரி சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு
இதனை தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது எனவும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழக்கு தொடர்ந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து நவம்பர் 6 ஆம் தேதி 44 இடங்களில் அணிவகுப்பு, ஊர்வலம் நடத்த அனுமதியளித்தது.

ஒத்திவைப்பு
இந்த நிலையில் சில இடங்களில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததால் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அணி வகுப்பு ஊர்வலத்தை ஒத்திவைப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிவித்து இருக்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அறிக்கை
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். தென் மண்டல தலைவர் வன்னியராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில், கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம்.

50 இடங்களில் திட்டம்
தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம். பாரத நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு அளித்தோம்.

உயர்நீதிமன்ற உத்தரவு
அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம். கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6, 2022 நடத்த கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம்.

உத்தரவு ஏற்புடையதல்ல
நேற்று (04.11.2022) வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மேல்முறையீடு
நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவம்பர் 6 ஆம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications