EXCLUSIVE: என்னது ஐஸ் தண்ணி குடிச்சா உயிர் போகுமா? வாட்ஸ் அப் தகவல் குறித்து மருத்துவர் விளக்கம்
சென்னை: வெயிலில் வெளியே சென்றுவிட்டு குளிர்ந்த நீரை குடித்தால் உயிருக்கு ஆபத்து என கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வரும் நிலையில், அதில் அறிவியல்பூர்வமான உண்மைகள் இல்லை என மருத்துவர் சையத் ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
கோடைகாலம் தொடங்கியதில் இருந்தே சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதில், "வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. வெயில் கொடூரம்... தவறான முடிவெடுக்கத் தூண்டும்.... ஆம்... வெயிலில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும்... வெப்பக் கொடுமையால்.. ஐஸ் வாட்டரை குடித்து விடாதீர்கள். 40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.
அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார். வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள்.
அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு நமது உடலை தயார்செய்துவிட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிக்கலாம். நல்ல உறுதிவாய்ந்த உடலுடைய நபர் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். கொதிக்கும் தனது உடலை உடனடியாக குளிர வைக்க விரும்பி குளிர்நீர் ஷவரில் குளித்தார். உடனே, அவருடைய தாடைகள் இறுகிக்கொண்டன. வாயை திறக்க முடியவில்லை. நல்லவேளை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். கைகால்கள் முடங்கி, உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் அவர் இருக்கிறார் என்று ஒரு டாக்டர் கூறுகிறார். வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மருத்துவர் விளக்கம்
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பாக, பொது மருத்துவர் சையது ஹஃபீஸ் எம்.டி. யிடம் விளக்கம் கேட்டோம். அப்போது பேசிய அவர்," கோடை காலத்தில் சூரியன் அதிகளவில் பூமிக்கு வெப்பத்தை தருவதால் உடல் சூடாகிறது. அப்போது உடலை குளிர்ச்சி செய்வதற்காக சாதாரணமாக செலுத்தப்படும் ட்ரிப்சை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதை உடலில் ஏற்றுவது ஒரு சிகிச்சை முறையாகவே உள்ளது.
பாட்டி வைத்தியம்
காரணம் உடல் வெப்பம் 103 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும்போது உடல் சூட்டை அது குறைக்கும். குளிர்ச்சியானதை வைத்து உடல் சூட்டை குறைப்பது நமது பாட்டி வைத்தியத்திலேயே இருக்கும் ஒரு முறைதான். உடல் சூடாகி இருக்கும்போது துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடல் முழுவதும் தேய்ப்பது வெப்பத்தை குறைப்பதற்காகதான். உடலில் இருக்கும் வெப்பத்தை குளிரானதை வைத்தே குறைக்க முடியும்.
அறிவியல் ஆதாரம் இல்லை
வெயிலில் நின்றுவிட்டு உடனே ஐஸ் தண்ணீரை குடித்தால் ஆபத்து என்று சொல்வதன் பின்னால் எந்த விதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ஆனால், கடுமையாக குளிரூட்டப்பட்ட நீரை குடிப்பதை பொதுவாகவே நாம் தவிர்க்க வேண்டும். அது வெயில் காலம் என்பதால் மட்டுமல்ல. அதிகம் குளிர்ந்த நீரை நாம் அருந்தும்போது தொண்டையிலும் வயிற்றிலும் இருக்கக்கூடிய செல்கள் பாதிக்கப்படும்.
உயிர் போகுமா?
இதன் காரணமாக சில விளைவுகள் வருமே தவிர வெயிலில் இருந்து வந்தவுடன் குளிர்ந்த நீரை குடிப்பதால் உயிர்போகும், மயக்கம் ஏற்படும் என்பன போன்ற ஆபத்துகள் ஏற்படும் என நவீன மருத்துவத்தில் தெரிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் எந்தவிதமான விஞ்ஞானப்பூர்வமான சான்றுகளும் இல்லை. பொதுவாகவே குளிரான தண்ணீரை குடிக்கக்கூடாது, முகத்தை அதில் கழுவக்கூடாது.
ஏசி அறையில் அமரலாமா?
வெயிலில் இருந்து எப்போது வீட்டுக்கு வந்தாலும் பெரிய அளவில் நமது உடல் சூடு மாறிவிடப்போவது கிடையாது. அதிகபட்சம் ஒரு 2 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கலாம். அதனாலேயே குளிர்ந்த தண்ணீரை அருந்துவதால் ஆபத்து என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை. இப்படிதான் திடீரென வெயிலில் இருந்து வந்த உடனே ஏசி அறையில் அமரக்கூடாது என்று சிலர் சொல்வார்கள். அதற்கும் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நம் உடல் அந்த சூழலுக்கு ஏற்ப உடனே தன்னை தகவமைத்துக்கொள்ளும்.