மகாராஜா பிறந்தநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை நாளை வியாழக்கிழமைதிறக்கப்படுகிறது.
சென்னை: சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகாராஜாவின் பிறந்த நாள் வருகிற 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தேவசம் போட்டு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13ஆம் தேதி சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின், இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மீண்டும் மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 2020-2021 ஆண்டுகளுக்கான புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு சடங்கு நடைபெறும்.
முன்னதாக புதிய மேல்சாந்திகளுக்கான அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் சபரிமலை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

சபரிமலை கோவில்
கார்த்திகை 1ஆம் தேதி மறுநாள் 16ஆம் தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்கள். தொடர்ந்து அதிகாலை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மண்டல பூஜை, மகர விளக்கு
ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும். மகரவிளக்கு பூஜை 2021 ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும். நவம்பர் 16ஆம் தேதி முதல் 2021 ஜனவரி 19ஆம் தேதி வரையிலான அனைத்து தினங்களுக்கான ஆன் லைன் தரிசன முன்பதிவு முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி
மண்டல பூஜை காலத்திற்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு, கேரள மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மண்டல பூஜை, அதைத் தொடர்ந்து மகரவிளக்கு மற்றும் மகர ஜோதி தரிசனத்தை ஒட்டி நாளொன்றுக்கு 1000 பக்தர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா நெகட்டிவ்
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம், கைகளை கழுவ சானிடைசர் போன்றவற்றை உடன் கொண்டு வரவேண்டும், அதோடு போதிய சமூக இடைவெளியையும் அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஐயப்பனை தரிசிக்க, ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும், சபரிமலைக்கு வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும்.

பக்தர்கள் தவிர்க்கவும்
கொரோனா சான்றிதழை நிலக்கல்லில் உள்ள முகாமில் சமர்பித்து, சரிபார்த்து ஒப்புதல் பெற்ற பின்பே சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமாக சமீபத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் சபரிமலைக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலை தரிசனம்
சபரிமலைக்கு வருபவர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழ் முக்கியம் என்பது கேரளா மட்டுமன்றி அனைத்து மாநில பக்தர்களுக்கும் பொருந்தும் என கேரள அரசு உத்தரவிட்டுள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில பக்தர்கள் மலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் ஐயப்பன் மனது வைத்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். பக்தர்களுக்கு எளிதாக தருவாரா சபரிமலை ஐயப்பன்.












Click it and Unblock the Notifications