நம்ம சச்சின் டெண்டுல்கரா இது.. எதுக்கு இப்படி பேச ஆரம்பிச்சுட்டார்!
சென்னை: இந்திய அணியின், 11 வீரர்களில் இவர்தான் குட்டையான உருவம்.. சின்ன பையன் மாதிரி முகம்.. கோதிவிட தூண்டும் சுருட்டை முடி.. குரலிலும் குழந்தைத் தன்மை.. அப்படி நாம் சுட்டிக் குழந்தையாக பார்த்த சச்சின் டெண்டுல்கர்தானா இது என்று சொல்லும் அளவுக்கு இப்போதெல்லாம் அவரது செயல்பாடுகள் மாறிப் போய்விட்டன.
சச்சின் டெண்டுல்கர் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது இந்திய அணியை ஒற்றை ஆளாக நின்று தாங்கிப்பிடித்து வெற்றிக் கனியை பறித்துத் தரும் அந்த போர்க்குணம்தான்.
"மூர்த்தி சிறிசு.. ஆனால் கீர்த்தி பெருசு" என்று சொல்வார்களே, அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நம்ம சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்குத்தான் பொருந்தும். எத்தனையோ கீர்த்திகளை இந்திய அணியின் மணிமுடியில் கொண்டு வந்து சேர்த்த மாவீரன்தான் சச்சின் டெண்டுல்கர். அவர் பேசுவதை விட அவரது பேட் அதிகம் பேசியிருக்கும்.
வாயே திறக்க மாட்டார்கள்
பந்துவீச்சாளர் யாராவது இவரிடம் ஸ்லெட்ஜிங் வம்பு செய்தால், பதிலுக்கு இவர் வாயால் பேச மாட்டார். அடுத்த பந்தை பவுண்டரி எல்லைக்கு வெளியே விரட்டி விடுவதுதான் சச்சினின் ரிப்ளேயாக இருக்கும். இதனால்தான், எதற்கு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வானேன், என்று எந்த பலரும் சத்தம் போடாமல் இடத்தை காலி செய்து விடுவார்கள். ஒரு பவுலர் சச்சின் தலையை குறிவைத்து பவுன்சர் வீசிவிட்டால் போதும். அடுத்த பந்து பவுண்டரி, அல்லது சிக்சருக்கு செல்லும் என்பது எழுதப்படாத விதி. அந்த அளவுக்கு கோபம் வந்துவிடும் சச்சினுக்கு.
ஓவர் சவுண்டு விட்ட ஒலங்கா
1998ம் வருடம் ஷார்ஜாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. லீக் ஆட்டத்தில் ஹென்ட்ரி ஓலங்கா வீசிய பந்தில் சச்சின் கேட்ச் கொடுத்து அவுட்டாக.. சச்சினை பார்த்தபடியே.. ஆகா, ஓகோ என்று ஒலங்கா குதித்துக் கொண்டு ஆட்டம் போட்டார். டிவியில் பார்த்த ரசிகர்களுக்கே ஒலங்காவின் செயல் கடுப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியை அப்படியே, மனதுக்குள் பதிவு செய்து பெவிலியன் திரும்பினார் நம்ம லிட்டில் மாஸ்டர். அடுத்த இரண்டு நாட்களில் இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
உரித்து காயப்போட்ட மாஸ்டர்
அந்த போட்டியில் ஹென்ட்ரி ஒலங்காவை குறி வைத்து, உரித்து உப்புக்கண்டம் போட்டார், மாஸ்டர் பிளாஸ்டர். ஒலங்கா, எந்த பக்கம் போட்டாலும் அடியோ அடி. தலை தொங்கிப்போனது ஒலங்காவுக்கு. சத்தம் வெளியே வரவில்லை. 197 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா, சிறிய இலக்கு என்பதால் மெல்ல விளையாடி இருக்கலாம்தான். ஆனால் விளாசித் தள்ளினார் சச்சின். வெறும் 6 ஓவர்களில் 50 ரன்களை கொடுத்தார் ஒலங்கா. அதில் சச்சின் சந்தித்த பந்துகள் எல்லாமே தெறிக்கவிடப்பட்டவை. இத்தனைக்கும் அப்போது ஒலங்காதான் ஜிம்பாப்வே அணியின் டாப் பவுலர். இது ஒரு உதாரணம்தான். இப்படி எத்தனையோ பவுலர்களை பதற விட்டுள்ளார் சச்சின்.
கிரிக்கெட் கடவுளுக்கும் வயதாகுமோ
இப்படி சச்சின் பேட்டிங்கை பார்த்து, அவரை ஒரு பெரிய இடத்தில் வைத்திருந்த நமக்கு, அவருக்கும் வயதாகிறது என்ற உணர்வு இல்லாமல் போய்விட்டது. கடவுளுக்கு வயதாகுமா, என்று நினைத்து நாம் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், தனக்கு 47 வயது ஆகிவிட்டது என்பதை சச்சின் செயல்பாடுகளே காட்டிக் கொடுத்துவிடுகின்றன.
அந்த காலத்துல நாங்க..
நேற்று, இப்படித்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியின்போது, சஞ்சு சாம்சன் ஒரு கேட்ச் பிடித்து பின்னால் விழுந்தார். அப்போது நிலைதடுமாறியதால் தலை கிரவுண்டில் வேகமாக பட்டது. இதைப் பார்த்த சச்சின் "நானும் இப்படித்தான், 1992ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டின்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் விழுந்து அடி வாங்கினேன். சாம்சன் பிடித்தது அருமையான கேட்ச், என்று சொல்லியிருந்தார்.
வயசாகிடுச்சோ
"நாங்கல்லாம் அந்த காலத்தில.." என்று வயதானவரை போல சச்சின் கூறுவதை பார்த்து, ஷாக்காகி போகின்றனர் சச்சின் ரசிகர்கள். இந்த விஷயத்துக்கு மட்டும் கிடையாது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்து கொண்டு மற்ற ரசிகர்கள் எப்படி உடனுக்குடன் கமெண்ட் செய்து டுவிட் போடுவார்களா அதுபோல சச்சினும் போட்டுக் கொண்டிருக்கிறார். எப்படி பிஸியாக இருந்த மனிதர், இப்போது பந்துக்கு பந்து லைவ் கமெண்டரி போட்டுக் கொண்டிருக்கிறாரே.. என்று சச்சின் ரசிகர்களே ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். இன்னும் சிலரோ, இவ்வளவு நாள் பேசாமல் இருந்துவிட்டார். இப்போதாவது அவருடன் டுவிட்டர் மூலமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு சந்தோஷப்படுகிறேன், என்று கூறிக்கொள்கிறார்கள். என்ன இருந்தாலும் அதிகம் பேசி அறியாதவர் சச்சின். அவரது பெருமைகளை அடுத்தவர்கள்தான் பேசுவார்கள். இப்போது, தனது பழம்பெருமை அவரே பேச ஆரம்பித்துள்ளதை பார்த்தால், சச்சினுக்கு வயதாகி விட்டதோ என்ற எண்ணம் முதல் முறையாக நமக்கு வருவதை தவிர்க்க முடியவில்லைதான்.