பேசுவதெல்லாம் தப்பு.. தப்பு மட்டுமே.. பாஜகவின் மாபெரும் தலைவலியாக மாறும் பிரக்யா!
Recommended Video
சென்னை: பாஜகவுக்கு மிகப் பெரிய நெருக்கடியாக உருவெடுத்து வருகிறார் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். அவர் பேசுவது எல்லாமே சர்ச்சை மட்டுமே. இப்படியே போனால் பாஜகவை மிகப் பெரிய புதைகுழியில் அவர் தள்ளி விடும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இதற்கு முன்பும் கூட பல பெண் தலைவர்கள், ஏன் பெண் சாமியார்கள் பாஜகவில் இருந்தனர். இப்போதும் கூட உள்ளனர். ஆனால் பிரக்யாவைப் போல அடித்தளத்தை உலுக்கி எடுக்கும் அளவுக்கு யாரும் தாறுமாறாக நடந்து கொண்டதில்லை என்பது முக்கியமானது.
உமாபாரதி இடத்தில் பிரக்யா என்பதுதான், பிரக்யாவை போபாலில் பாஜக சீட் கொடுத்து நிறுத்தியபோது வலுவான கருத்தாக எழுந்தது. இதனால் உமா பாரதியே கூட அதிர்ச்சி அடைந்துதான் போனார். ஆனால் கட்சிக் கட்டுப்பாட்டுக்காக அமைதி காத்தார்.
ரஜினியின் பார்வை.. "ராஜபார்வை" மீது!
சறுக்கல் ஆரம்பம்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து வெளியே வந்தது முதலே பிரக்யாவால் சர்ச்சைதான் ஏற்பட்டு வருகிறது. வெளியே வந்த அவர் தான் விட்ட சாபத்தால்தான் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளிடம் சிக்கி செத்துப் போனார் என்று கூறி நாட்டையே அதிர வைத்தார்.
அதிர்ச்சி பாஜக
பாஜகவும் கூட இந்தப் பேச்சால் அதிர்ச்சி அடைந்தது. கர்கரேவின் உயிர்த் தியாகத்தை இப்படித் தூக்கிப் போட்டு பிரக்யா மிதிப்பார் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பாஜக மேலிடம் போட்ட கடிவாளத்தால், தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார் பிரக்யா.
பேச தடை
பிரக்யாவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த பாஜக அவரை தேர்தல் முடியும் வரை பேசக் கூடாது என்று தடையே போட்டு விட்டது. தேவையில்லாமல் பொது வெளியில் பேசக் கூடாது என்று அவர் கட்டுப்படுத்தப்பட்டார்.
கோட்சேவுக்கு புகழாரம்
ஆனால் கமல்ஹாசனின் கோட்சே பேச்சுக்கு கருத்து தெரிவிக்கிறேன் பேர்வழி என்று கோட்சேவை தேச பக்தர் என்று விளித்து நாட்டை மீண்டும் அதிர வைத்து விட்டார் பிரக்யா. கமல் மீது பாய்ந்து கொண்டிருந்த அத்தனை பேரையும் பிரக்யா காலை வாரி விட்டு விட்டார். ஒட்டுமொத்த தேசமும் பாஜகவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டது.
மீண்டும் மன்னிப்பு
பிரக்யாவின் பேச்சால் பாஜக தலைமை மிகக் கடுமையான கோபத்திற்குள்ளாகியுள்ளது., அரும்பாடுபட்டு ஒரு பக்கம் வாக்குகளுக்காக அல்லாடிக் கொண்டிருந்தால், மறுபக்கம் பிரக்யா போன்றவர்கள் இப்படி காலை வாரி விட்டுக் கொண்டே இருந்தால் என்னதான் செய்வது. பிரக்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க பாஜக உத்தரவிட்டது. வேறு வழியில்லாமல் மறுபடியும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா
கடுப்பில் மோடி
பிரக்யாவின் பேச்சால் பிரதமர் நரேந்திர மோடியும் கடுமையான அப்செட்டில் உள்ளாராம். பிரக்யாவை மன்னிக்கவே முடியாது என்று பகிரங்கமாகவே பிரதமர் கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிறகு பிரக்யா மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பிரக்யா தொடர்ந்து இதுபோலவே பேசி வருவதால் பாஜகவின் மீது மக்களுக்கு சந்தேகப் பார்வையும் வலுத்துள்ளது.
|
கடினம்
உமா பாரதியும் சர்ச்சைக்கிடமான கருத்துக்களைக் கூறியுள்ளார். ஆனால் நாட்டின் தேசிய உணர்வுகளை ஆட்டிப் பார்க்கும் வேலையை உமாபாரதி உள்பட பாஜகவினர் யாருமே செய்ததில்லை. காரணம், தேசியம் பேசித்தான் பாஜக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் பிரக்யா போகும் பாதை மிகவும் அபாயகரமானது என்பதால் அவர் சார்ந்துள்ள பாஜகவுக்குமே கூட இது பேராபத்து என்கிறார்கள் பிரக்யா உள்ளிட்டோரை கூர்ந்து கவனித்து வருபவர்கள்.