கமிஷனர் ஆபீஸ் பக்கத்திலேயே இந்த நிலை.. கஞ்சா போதையில் கடை காலி.. டிடிவி தினகரன் எச்சரிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் இதனைக் கவனிப்பாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பெரியமேடு அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகத்திற்குள் நேற்று இரவு உணவகத்திற்கு வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். அப்போது திடீரென அந்த உணவகத்திற்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல் ஒன்று வாலிபர் அன்சரை தாக்கியது. அத்துடன் உணவகத்திற்குள் இருந்த பொருட்களையும் அந்த கும்பல் தூக்கி எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டது.

அதே கும்பல் அருகில் இருந்த சலூன் கடைக்குச் சென்று கடை முன்பு இருந்த பேனரைக் கிழித்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கியது. மேலும் அவ்வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகராறில் ஈடுபட்டது. இதன் பின் அந்தக் கும்பல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே போதை ஆசாமிகள் அட்டூழியத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி குறித்து, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை, இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழிக்கிறது என்பதற்கு இக்காட்சிகளே உதாரணம்.
வெறும் பேச்சளவில் மட்டுமின்றி போதைப் பொருள் ஒழிப்பை உண்மையான அக்கறையோடு காவல்துறை செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும். காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கவனிப்பாரா?' என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications