“சனாதன தர்மம் என்பது இந்துக்கள் செய்யவேண்டிய கடமைகளின் தொகுப்பு.. இதையா அழிக்கணும்?” நீதிபதி கேள்வி!
சென்னை: சனாதனம் என்பது இந்துக்கள் தேசத்திற்காக, பெற்றோருக்காக செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு, அது அழிக்கத்தக்கதா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமுஎகச சார்பில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம். சனாதனம் சமத்துவதற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. " எனப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த இந்தப் பேச்சு, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியது. உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பாஜகவின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மாள்வியா, இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உதயநிதியின் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், நாடு முழுவதுமுள்ள பாஜகவினரும், இந்துத்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கொந்தளித்தனர். உ.பி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதியின் தலைக்கு ரூ. 10 கோடி விலை வைத்தார். சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி சனாதன தர்மத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். "சனாதன தர்மம் என்பது இந்து மத வாழ்க்கை முறையில் விதிக்கப்பட்ட நித்திய கடமைகளின் தொகுப்பு. தேசத்திற்கான கடைமை, பெற்றோருக்கான கடமை, மக்களுக்கான கடமை எல்லாம் இதில் அடங்கும். இந்தக் கடமைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டுமா?" என நீதிபதி சேஷசாயி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி கூறுகையில், "சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள். சனாதன தர்மம், தேசம் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு. ஒவ்வொரு மதமும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது. சனாதன தர்மம் என்பது தேசத்திற்கான கடமை, அரசனுக்கான கடமை, அரசன் தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பெற்றோருக்கும் குருக்களுக்கும் செய்ய வேண்டிய கடமை, ஏழைகளைப் பேணுதல் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த கடமைகள் அடங்கிய தொகுப்பு அழிக்கத்தக்கவையா?

மதங்களில் உள்ள மோசமான நடைமுறைகளை களையெடுக்க வேண்டுமே தவிர பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள். சனாதன தர்மம் என்பது சாதிவெறியையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பது மட்டுமே என கருதப்படுகிறது.
சனாதன கொள்கைகளுக்குள் எங்காவது தீண்டாமை அனுமதிக்கப்பட்டதாகக் காணப்பட்டால் ஜனநாயக நாட்டில் அதை சகித்துக் கொள்ள முடியாது. தீண்டாமையை ஒழிக்கும் வகையில் மாணவ மாணவியரை கல்லூரிகள் ஊக்குவிக்கலாம்" என நீதிபதி சேஷசாயி கருத்து தெரிவித்துள்ளார். சனாதன தர்மம் பற்றி சர்ச்சை நிலவி வரும் சூழலில் இதுகுறித்து நீதிபதி தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications