சனாதனத்தை டெங்கு கொசுவுடன் ஒப்பிட்டு பேசியவர்கள் அமைதியாகிவிட்டனர்.. உதயநிதியை சீண்டிய ஆளுநர் ரவி!
சென்னை: சனாதன தர்மத்தை டெங்கு கொசுவுடன் ஒப்பிட்டுப் பேசியவர்கள் மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது அமைதியாகிவிட்டனர்; இந்தியாவின் ஆன்மா சனாதன தர்மம்; சனாதன தர்மம் இல்லாமல் இந்தியாவே இல்லை. சனாதன தர்மம்தான் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது; அரவணைக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியவர் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் 'ஶ்ரீராமா இன் தமிழகம்- பிரிக்க முடியாத பந்தம் என்ற தமிழ், இந்தி, ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது இந்திய மக்கள் அனைவரது நெஞ்சங்களிலும் ராமர் நிறைந்திருக்கிறார். ராமர்தான் இந்தியாவை இணைக்கும் பாலம். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ராமர் கோவில்கள் உள்ளன. ராமர் தொடர்புடைய பெயர்கள் உள்ளன.

தமிழ்நாடு அழகிய ஆன்மீக பூமி. இங்குதான் கடவுள் ராமருக்கு எதிரான பிரசாரங்கள் நடைபெற்றன. ராமர் ஒரு கடவுளே இல்லை என்றனர். ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றெல்லாம் பேசினர். ஆனால் தமிழ்நாட்டில் ஏராளமான ராமர் கோவில்கள் உள்ளன. ராமருடன் தொடர்புடைய இடங்களும் ஏராளமாக தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட ராமர் கோவில்கள் உள்ளன.
ராமர் இல்லாமல் இந்தியா இல்லை. காந்தியடிகளுக்கு உத்வேகம் கொடுத்ததும் ராமர்தான். இந்திய மக்களின் நெஞ்சத்தில் இருந்து ராமரை அகற்றிவிட முடியாது. தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கும் அல்ல.
தமிழ்நாட்டில் கலாசாரத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சனாதன தர்மம் என்பதை மலேரியா, டெங்கு கொசுவுடன் ஒப்பிட்டுப் பேசினர். ஆனால் மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அதனால் சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசியவர்கள் அமைதியாகிவிட்டனர்.
இந்தியாவின் ஆன்மாவே சனாதன தர்மம்தான். சனாதன தர்மம் இல்லாமல் இந்தியா இல்லை. சனாதன தர்மம்தான் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. அனைத்து உயிர்களின் பாதுகாப்பையும் வலியுறுத்துவதும் சனாதன தர்மம்தான். பாரதம் இருக்கும் வரை சனாதன தர்மம் இருக்கும். சனாதன தர்மம் இருக்கும் வரை பாரத தேசமும் இருக்கும். இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.












Click it and Unblock the Notifications