ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு தடை செய்யவேண்டும்! சொல்வது ரம்மி "விளம்பர புகழ்" சரத்குமார்!
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தடை செய்ய வேண்டும் என ஆன்லைன் ரம்மி விளம்பரம் புகழ் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் தொடர்பாக நிறைய கேள்விகள் இருப்பதால், விரைவில் அதற்கு தனி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.
தாம் நடித்த ஆன்லைன் ரம்மி விளம்பரம் குறித்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் திரைப்பட புரோமோஷனுக்காக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமாரிடம், ஆன்லைன் விளம்பரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கணைகளை வீசினர். திரைப்படம் தொடர்பான கேள்விகள் கேட்பார்கள் என்று எதிர்பார்த்து வந்திருந்த சரத்குமார் இதனால் அதிர்ச்சி அடைந்தார். சுற்றி சுற்றி மீண்டும் அந்த கேள்வியிலேயே செய்தியாளர்கள் வந்து நின்றதால் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு கட்டத்தில் திகைத்து நின்றார்.

மத்திய அரசு மீது பழி
இதனிடையே ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தடை செய்ய வேண்டும் எனவும் அதன் பிறகு தடை செய்யப்பட்ட ஒன்றுக்கு தாம் விளம்பரம் கொடுக்க மாட்டேன் எனவும் சாதுர்யமாக பேசினார். சரத்குமாரின் இந்த பதில் மத்திய அரசு மீது பழியை சுமத்தும் வகையில் இருந்தது. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் தொடர்பாக நிறைய கேள்விகள் இருப்பதால், விரைவில் அதற்கு தனி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிக்க உள்ளதாக கூறினார்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நூற்றுகணக்கானோர் பணத்தை பறிகொடுத்து விபரீத முடிவுகளை நாடி வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் சரத்குமார் அது தொடர்பான விளம்பரத்தில் நடித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

15 நாள் அவகாசம்
இன்னும் 15 நாட்களில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது ஏன் என்பது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவுள்ளதாக சரத்குமார் கூறியிருப்பதால், அது தொடர்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications