தர்மயுத்தம் 2.0! அவரா வாங்குறத வாங்கிட்டு வரட்டும்! நேரம் பார்த்து அடித்த சசிகலா! பழசு ஞாபகம் வரும்ல
சென்னை : ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொதித்தெழுந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவு தருவார்கள் அவர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராதது ஓபிஎஸ் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.''
இதனால் இன்றைய பொதுக்குழுவில் 23 தீர்மானங்களில் சிலவற்றை மட்டும் நிறைவேற்றி மீண்டும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி தலைமையிலான தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதிமுக பொதுக்குழு
ஆனால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை தலைமை தீர்மானத்துடன் சேர்த்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையே பெரும்பாலான நிர்வாகிகள் கூறியிருந்தனர். இதையடுத்து மேடையில் உரையாற்றிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

சிக்கலில் ஓபிஎஸ்
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆன்மிக பயணம் மேற்கொண்ட சசிகலாவை பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா சந்தித்து பேசியது அதிமுகவிற்கும் புயல் ஏற்படுத்திய நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து ஓபிஎஸ்ஸுடன் நெருக்கம் காட்டாத ஓ.ராஜா பொதுக்குழுவுக்கு முன்னதாக அண்ணனை சந்தித்து பேசினார். அதன்பிறகு சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய பிறகு மீண்டும் தனது அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

சசிகலா ஆதரவு
தேவைப்பட்டால் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸுடன் வலியுறுத்தி, சசிகலாவுடன் இணைந்து பயணிப்பது தொடர்பாக உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் , ஓபிஎஸ்சிடம் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ள 250 நிர்வாகிகளும் 'ஒற்றைத் தலைமையாய் சசிகலா வார வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது

கண்டுகொள்ளாத டிடிவி தினகரன்
மேலும் எடப்பாடி பழனிச்சாமியார் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட டிடிவி தினகரனும் இந்த விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்து எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த வியூகம் வகுப்பார் என யூகங்கள் கிளம்பின. ஆனால் அவரும் தற்போது வரை எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை.இந்த யூகங்களை நம்புவதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் பேசியது, அடுத்தடுத்து அவரின் நடவடிக்கைகள், சசிகலா ஆதரவு பேட்டிகள் உள்ளிட்டவை காரணமாக சசிகலா பன்னீர்செல்வம் தினகரன் கைகோர்ப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

கைகொடுக்காத சசிகலா
ஆனால் கடைசி வரை சசிகலா - தினகரன் தரப்பு எவ்வித ஆதரவையும் பன்னீர்செல்வத்திற்கு வழங்கவில்லை. அதற்குப் பின்னரும் எவ்வித ஆதரவும் தெரிவிக்காத நிலையில் தற்போது திடீரென புரட்சி பயணத்தை தொடங்கி உள்ளார். இதன் காரணமாக எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அமமுகவுடன் சேர்ந்து அதிமுகவை கைப்பற்றுவது சசிகலாவின் திட்டமாக இருக்கிறது. மேலும் தர்ம யுத்தம் நடந்த போது நேரடியாக சசிகலாவை எதிர்த்தவர் ஓ பன்னீர்செல்வம். எனவே அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்காக அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் தற்போது நடக்கும் விவகாரங்களை சமாளித்து ஓ.பன்னீர்செல்வம் வரட்டும் பின்னர் பார்த்துக் கொள்வோம் என சசிகலா கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன












Click it and Unblock the Notifications