செம திருப்பம்.. அடுத்த மாதமே சசிகலா ரீ என்ட்ரி.. தமிழகம் முழுக்க டூர்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்
சென்னை: சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை காட்டுவதற்கு நேரம் குறித்து விட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டதும் இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுக்க சசிகலா சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க உள்ளார் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
சசிகலா ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி அளித்துள்ள ஒரு பேட்டியில் கிட்டதட்ட இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்த சசிகலா மீண்டும் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தால், சமீபத்திய தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கப்போகிறது என்று ஆருடம் கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
எடப்பாடி செய்த தவறுக்கு என்ன செய்ய முடியும்?.. ஜெ. அளவுக்கு கட்சியை உயர்த்தலாம்.. சசிகலா ஆடியோ
உற்சாக வரவேற்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறைச்சாலையில் நான்கு வருடம் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. கடந்த பிப்ரவரி மாதம் அவர் சிறைவாசம் காலம் முடிவடைந்து சென்னைக்கு திரும்பினார். பெங்களூரிலிருந்து சென்னைக்கு அவர் வந்த வாகனத்தை சாலையின் இருமருங்கிலும் நின்று தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பல மணி நேர பயணத்துக்கு பிறகு அதிகாலையில் சென்னை வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
அரசியல் ஓய்வு
இப்படி மாஸ் காட்டியதால் மறுபடியும் அவர் அரசியல் என்ட்ரி பெரிய அளவில் இருக்கும், அதிமுகவை கைப்பற்றுவதற்கு, அடுத்தடுத்து அவர் நடவடிக்கைகளை தொடங்குவார் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், மார்ச் 3ம் தேதி இரவு திடீரென ஒரு வெள்ளைத்தாளில் சசிகலா ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாகவும், அம்மா ஆட்சி மறுபடி மலர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் மறைமுகமாக அவர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததாக கூறினர் அரசியல் பார்வையாளர்கள்.
வெற்றிகரமான தோல்வி
இந்த நிலையில்தான் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக ஆளுங்கட்சியாக அரியணை ஏறி உள்ளது. தேர்தல் முடிவுகள் வந்ததும் மறுபடி சசிகலா அரசியலில் காலடி எடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதிமுக மிக மோசமான அளவில் தோல்வியை சந்திக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கருணாநிதி தலைமையில், திமுக பெற்ற தொகுதிகளை விட சுமார் 2 மடங்கு அதிக தொகுதிகளை வென்று உள்ளது அதிமுக. இதை எப்படி மோசமான தோல்வி என்று கூறிவிட முடியும்.
மேற்கு மண்டலம்
அதிலும் குறிப்பாக மேற்கு மண்டல தொகுதிகள் வழக்கம்போல இரட்டைஇலைக்கு வாரி வழங்கியுள்ளன. எனவே சசிகலா அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தாலும் தொண்டர்கள் ஆதரவு பெரிதாக இருக்காது என்று கணித்தனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் எழுந்துள்ள விரிசல் இப்போது பூதாகரமாகி உள்ளது.
கட்சிக்குள் கருத்து வேறுபாடு
பன்னீர்செல்வம் தேனியிலிருந்தும், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்தும், அரசியல் செய்து வருகின்றனர். தலைமைச் செயலக முகவரியுடன் கூடிய லெட்டர் பேடு எடப்பாடிபழனிசாமியால் பயன்படுத்தப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலக முகவரியுடன் கூடிய லெட்டர் பேடை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார்.
தொலைபேசி உரையாடல்கள் லீக்
இந்த சந்தர்ப்பத்தை சசிகலா பயன்படுத்துவார் எனக் கூறப்படுகிறது. எனவேதான், சசிகலா சில தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி அந்த உரையாடல்கள் லீக் செய்யப்பட்டுள்ளன . இதன்மூலம் தொண்டர்களின் மனநிலை ஆழம் பார்க்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இதுபற்றி கருத்து தெரிவிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முனுசாமிதான் சசிகலா ஆடியோ பற்றி கருத்து கூறியுள்ளார். சசிகலா பேசியது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொண்டர்களுடன்தான், எனவே அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார் முனுசாமி.
இரு வகை வாய்ஸ்கள்
அதிமுகவில் இப்படி இரு வகையான குரல்கள் ஒலிப்பதை பயன்படுத்திக்கொண்டு சசிகலா அதிமுக தொண்டர்களை இழுக்க முயற்சி செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையால் உரசல்கள் இருக்கின்றன, எனது தலைமையில் ஒற்றை தலைமை அமைந்தால் அதிமுக பலம் பெற்றுவிடும் என்பது அவரது முக்கியமான கோஷமாக இருக்கக்கூடும்.
உறுதி செய்த சி.ஆர்.சரஸ்வதி
ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க இருக்கிறார் சசிகலா. அப்போது இரட்டை தலைமையால் சிக்கல்தான் ஏற்படும் என்றும், தனது தலைமையை ஏற்க வேண்டும் என்றும் அவர் பேசக்கூடாது என்று கூறப்படுகிறது. ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சசிகலா ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி இதுபற்றி கூறுகையில், ஊரடங்கு காலம் முடிந்த பிறகு சசிகலா தொண்டர்களை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்போது செய்தியாளர்களிடம் விரிவாக பேசுவார் என்று நினைக்கிறேன், என மறைமுகமாக அவரது சுற்றுப் பயணத்தை உறுதி செய்துள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவு
அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிய சசிகலா, மீண்டும் அரசியலுக்கு வந்தால், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அவர் அதிகப்படியான சுற்றுப் பயணங்களை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்த தேர்தலில் பிளவுபட்ட ஜாதி ரீதியான வாக்குகளை ஓரணியில் திரட்ட முடியும். திமுகவுக்கு எதிராக அதிமுகவை மேலும் வலுவாக மாற்ற முடியும் என்று நம்புகிறார்.
சசிகலாவுக்கு இருக்கும் சவால்
ஆனால் மேற்கு மண்டலம் ஒரே குரலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறது. இதுதான் சசிகலாவுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் . தென் மண்டலத்தில் உள்ள பல முன்னாள் அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளித்து ஒன்றிணைந்து விடுவார்கள். மேற்கு மண்டலம் சசிகலாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி தனது ஆளுமையை விட்டு தர மாட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எனவே அடுத்தடுத்த மாதங்களில் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.