34 ஆண்டுகள் நட்பு.. ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா முதல்முறையாக அஞ்சலி!
சென்னை: ஜெயலலிதா நினைவு தினத்தில் முதல் முறையாக சசிகலா அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தியதால் மிகவும் உருக்கமாகி கண்ணீர் விட்டார். பின்னர் 34 ஆண்டுகாலம் உடனிருந்த நினைவுகளை சுமந்தபடியே கனத்த இதயத்துடன் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
1980களில் வினோத் வீடியோ சென்டர் என்ற ஒரு வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடையை நடத்தி வந்தார் சசிகலா. ஆழ்வார்பேட்டையில் இவருக்கு கடை இருந்தது.
கேசட் விற்பனை மட்டும் அல்லாது பெரிய தலைவர்களின் அரசியல் பேச்சுகளையும் வீடியோ எடுத்து அதை கேசட்டாக உருவாக்கி தருவார்களாம். இதில் சசிகலாவுக்கு புதிய டெக்னிக் ஒன்று கைகொடுத்ததால் ஜெயலலிதாவின் அரசியல் பேச்சுகளை வீடியோ எடுத்து கேசட் வடிவில் கொண்டு வரும் அளவுக்கு உயர்ந்தார்.

வேலை திறன்
இவரது அற்புதமான வேலை திறனை கண்ட ஜெயலலிதா இவரை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து பாராட்டினார். அதிலிருந்து ஜெயலலிதாவுடன் சசிகலா நட்பு ரீதியில் பழகினார். 1982 ஆம் ஆண்டு முதல் அடிக்கடி போயஸ் தோட்டத்திற்கு ஜெயலலிதா அனுப்பும் கார் மூலம் சசிகலா வந்து சென்றுள்ளார். இப்படியாக ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தொடங்கிய நட்பு இறுதி வரை நிலைத்தது.

ஜெயலலிதா
நடுவில் பல சஞ்சலங்கள் இருந்தாலும் தனக்கு இன்னொரு தாய் சசிகலா என ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு தனிமையில் இருந்த ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் நட்பு பெரிய ஆறுதலை கொடுத்தது. ஜெயலலிதா கடைசியாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்
அந்த 75 நாட்களும் ஜெயலலிதாவை சசிகலா கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டதாக தெரிகிறது. அவரது இறப்பை ஏற்க மனமில்லாமல் ராஜாஜி அரங்கில் கண்களில் கண்ணீர் குளத்துடன் நிராயுதபாணியாக அவர் நின்றிருந்த காட்சிகளை இன்றும் தொண்டர்கள் அசை போடுகிறார்கள். 34 ஆண்டு கால நட்பு என்பது எத்தனை பெரிய விஷயம். அதிலும் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஒரு பிரபலத்துடன்!

முதல் நினைவு நாள்
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதாவது ஜெயலலிதாவின் முதல் நினைவு நாள் அனுசரிப்பதற்கு முன்பே சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றுவிட்டார். அப்போது ஜெயலலிதா சமாதிக்கு சென்றுவிட்டு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். ஆனால் சிறையில் ஜெயலலிதா நினைவு நாளில் மவுன விரதத்தை சசிகலா கடைப்பிடித்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு விடுதலையாகி வந்த அவர் வந்ததும் வராததுமாக ஜெயலலிதா சமாதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

முதல் முறை
ஆனால் அவர் செல்லவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலிருந்து சென்னை வந்த சசிகலா, அக்டோபர் மாதம் 16ஆம் தேதி முதல்முறையாக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு ஜெயலலிதா தன்னுடன் இல்லாத வெறுமையை நினைத்தும் கட்சியின் போக்கை நினைத்து கவலைப்பட்டும் கண்ணீர் விட்டார். அத்துடன் இன்றைய தினம் டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா அஞ்சலி செலுத்துவது இதுவே முதல்முறை. அப்போதும் துக்கம் தொண்டையை அடைத்து தனது தோழி இந்த மண்ணுலகை விட்டு சென்றதற்காக கண்ணீர் விட்டார்.












Click it and Unblock the Notifications