சசிகலா மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கு.. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை.. 12-ந் தேதி முதல்!
சென்னை: சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், சாட்சிகளிடம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் விசாரணை தொடங்க உள்ளதாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
ஜெ.ஜெ. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் வாங்கியது, உள்ளிட்டவை தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்க பிரிவு அதிகாரிகள் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலவாணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். சசிகலா மீது மட்டும் மொத்தம் 4 வழக்குகள் தொடரப்பட்டன.
வீடியோ கான்பரன்சிங்
பெங்களூர் சிறையில் சசிகலா உள்ளதால், வீடியோ கான்பரன்சிங் மூலமே இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது. எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 20-ந் தேதி 2 வழக்குகளில் காணொலி காட்சி மூலம் எழும்பூர் கோர்ட்டு சசிகலா மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது.
நினைவில் இல்லை
அப்போது நீதிபதி மலர்மதி கேட்ட பல கேள்விகளுக்கு இல்லை, தெரியாது, நினைவில் இல்லை, தொடர்பு இல்லை என்பது போன்ற பதில்களை மட்டுமே சசிகலா அளித்தார். அதன்பின் கடைசியாக அமலாக்கத்துறை குறுக்கு விசாரணைக்கு மட்டும் சசிகலா ஒப்புக்கொண்டார்.
ஒரு மணி நேரம் விசாரணை
இந்நிலையில், மற்ற 2 வழக்குகளில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக எழும்பூர் கோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலாவிடம் நேற்று விசாரணை நடந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.
காது கேட்குமா?
அப்போது நீதிபதி மற்றும் தனது வக்கீல்களுக்கு சசிகலா கைகூப்பி வணக்கம் சொன்னார். அவரிடம் பெயர், வயது, காது கேட்குமா, ஆங்கிலம் தெரியுமா என மாஜிஸ்திரேட் கேட்டார். பிறகு அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக அமலாக்க துறையினரின் குற்றச்சாட்டை தமிழில் படித்து காட்டினார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் ஏற்கிறீர்களா, அல்லது மறுக்கிறீர்களா என சசிகலாவிடம் கேட்டார்.
மறுக்கிறேன்
அதற்கு சசிகலா, "இந்த குற்றச்சாட்டுக்களை எல்லாம் நான் மறுக்கிறேன். என் வக்கீல் மூலமாக, அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார். இதையடுத்து 4 அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, வருகிற 12-ந் தேதி அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை துவங்கப்படும் என்று உத்தரவிட்டார்.