கொங்குமண்டலத்தை குறிவைக்கும் சசிகலா - அடுத்த ஆன்மீக பயணம் எங்கு தெரியுமா
தனது அடுத்த ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்கப்போகிறார் சசிகலா. கொங்கு மண்டலத்தை குறி வைத்து பயணத்தை தொடங்கப்போகிறார் சசிகலா.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தன்மீது எந்த சந்தேகமும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியதை அடுத்து மகிழ்ச்சியோடும் பூரிப்போடும் தனது அடுத்த ஆன்மீக பயணத்தை ஆரம்பித்து விட்டார். கொங்கு மண்டலத்தை குறிவைத்து தனது பயணத்தை தொடங்கப்போகிறார்.
பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக கூறினார் சசிகலா. பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக தெரிவித்தார். திடீரென குல தெய்வக்கோவிலுக்கு போனவர் டெல்டா மாவட்டங்களில் ஆன்மீக பயணத்தை தொடங்கினார்.
திருச்செந்தூர், திருச்சி, சமயபுரம், திருவானைக்காவல் என ஆலய தரிசனம் செய்தார். தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்மிக பயணம் மேற்கொண்ட சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.

சசிகலா சந்தோஷம்
கோவில் கோவிலாக போன சசிகலாவிற்கு மிகப்பெரிய நிம்மதியே ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஓபிஎஸ் சொன்னதுதான். தன்மீதான களங்கம் துடைக்கப்பட்டு விட்டதாகவே கருதும் சசிகலாவிற்கு மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களை இனி தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று நினைக்கிறார் சசிகலா.

கொங்கு மண்டலத்திற்கு குறி
இந்த நிலையில் அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார். அதன்படி வருகிற 31ஆம் தேதி பங்குனி அமாவாசையில் கோவில்களில் தரிசித்த படி மீண்டும் ஆன்மிக பயணத்தை தொடங்கும் அவர் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்கிறார்.

காலபைரவர் தரிசனம்
ஏற்கனவே சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் சசிகலாவை சந்தித்து ஆதரவு அளித்துள்ளனர். அவர்கள் மூலம் பிற நிர்வாகிகளுக்கும் சசிகலா தரப்பில் தூது விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரியில் 31ஆம் தேதி பயணத்தை தொடங்கும் அவர் காட்டு வீர ஆஞ்சநேயர், தேன்கனிக்கோட்டை கால பைரவர் கோவில்களில் தரிசனம் செய்ய உள்ளார்.

பண்ணாரி அம்மன் தரிசனம்
தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பத்ரகாளியம்மன், எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில்களில் வழிபடுகிறார். தொடர்ந்து அன்று இரவு சேலத்தில் தங்குகிறார். அப்போது தனது ஆதரவாளர்களை சந்திக்கிறார்.ஏப்ரல் மாதம் 1ஆம்தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில்களில் தரிசனம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் சசிகலா
திருப்பூர் வழியாக கோவை செல்கிறார். அங்கு ஈச்சனாரி விநாயகர் கோவிலில் கொங்கு மண்டல பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த நிகழ்வுகளில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலர் சசிகலாவை சந்திப்பார்கள் என்று கூறப்படுவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications