அதிமுக இடத்தை பிடிக்க பாஜக முயற்சிக்கிறதா?.. சசிகலாவிடம் கேட்ட செய்தியாளர்கள்
சென்னை: சேலத்தில் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய சசிகலாவிடம் அதிமுக இடத்தை பிடிக்க பாஜக முயல்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவியிலிருந்து அதிமுகவின் மூத்த தலைவர்களான ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் நீக்கம் செய்தனர்.

ஓபிஎஸ்
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் என்ற பதவிகள் நீக்கப்பட்டு ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றனர். இதை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுக பொதுச் செயலாளர்
அதிமுக பொதுச் செயலாளர் இல்லாமலேயே பொதுக் குழு கூட்டப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். மேலும் சசிகலா தொடர்ந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சசிகலாவுக்கு எதிரான வழக்கு
சசிகலாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை அதிமுக மூத்த தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் சசிகலாவோ இந்த தீர்ப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்திருந்தார்.

சேலம் பயணம்
சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் சசிகலா. அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுவுள்ளோம். அதற்கிடையில் அரசியல் ரீதியாக எப்படி வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கு நெருக்கடி எதுவும் இல்லை.

டிடிவி தினகரன்
தீர்ப்பை அதிமுகவினர் கொண்டாடியதாக கருத்துகள் வந்தன. ஆனால் நான் அங்கு பார்த்ததே வேறு. கொங்கு மண்டலத்தில் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் என்றார். டிடிவி தினகரன் மீதான அமலாக்கத் துறை வழக்கை சுட்டிக் காட்டி மத்திய அரசிடம் இருந்து ஏதேனும் அழுத்தங்கள் இருக்கிறதா என சசிகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பல வழக்குகள்
அதற்கு அவர் "எங்களை பொறுத்தவரைக்கும் 1996லேயே இருந்தே இது போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறோம். இதனால் இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல" என்றார். அதிமுக இடத்தை பாஜக பிடிக்க முயற்சிப்பது தொடர்பான கேள்விக்கு சசிகலா கூறுகையில், அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. நிறைய கட்சிகள் தங்கள் கட்சியை முதன்மைப்படுத்த நினைக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. எங்களை பொறுத்தவரைக்கும் அதிமுக ஒருங்கிணைத்து வெற்றிபெற வைக்க வேண்டும். அதை செய்து முடிப்பேன்.

அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது
தொடர்ந்து பயணம் செய்துகொண்டு தான் உள்ளேன். ஆன்மீக பயணம் என்ற முறையில் சென்றால் கூட, அரசியல் நிர்வாகிகள் என் கூடவே வருகிறார்கள். எனவே அரசியல் பயணத்தையும் அப்படியே தொடங்க போகிறேன். அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications