எஸ்பிஐக்கு வெட்கம் இல்லையா? இது கேலிக்கூத்து.. விட்டு விளாசிய பிடிஆர்.. பரபரப்பு அட்டாக்!
சென்னை; தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட கூடுதல் ஜூன் 30 வரை அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கிக்கு மீது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தேர்தல் பத்திர தீர்ப்பு என்பது மொனோபாலி தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சிகளை தாஜா செய்து வந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விழுந்த ஒரு அடியாகும். இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும்.
எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருந்தது.. அதனால் எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும். அரசியல் வர்க்கமும் தொழில்துறையும் இந்த தீர்ப்பால் தடம் புரண்டு உள்ளன என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் பாத்திரங்கள் செயல்படும் முறை: கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது.
தீர்ப்பு: இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் விசாரித்து கடந்த நவம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில்தான் தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
உத்தரவு; தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இதுவரை கட்சிகள் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து நிதிகளை பெற்றது என்ற விவரங்கள் மொத்தமாக வெளியே வரப்போகிறது.
அதன்படி எஸ்பிஐ வழியாக 2019 ஏப்ரல் 12 முதல் தேர்தல் பத்திரங்களை விற்றது யார், எந்த அரசியல் கட்சிக்காக வாங்கினார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மார்ச் 4 அன்று உச்ச நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. தற்போது மார்ச் 6ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதை ஜூன் 30, 2024 வரை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளது .
பிடிஆர் கண்டனம்; தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட கூடுதல் ஜூன் 30 வரை அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கிக்கு மீது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் தரவுகளை சேகரிக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது. அதற்கு 4 மாதம் தேவை என SBI கால அவகாசம் கோரியுள்ளது மிகவும் கேவலமானது.
தரவுகளை நாளைக்கே சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதனை வழங்கும் திறனை SBI வங்கி கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்கக் கூடாது. 1.5 கோடி மதிப்புள்ள சிஸ்டங்களை நிறுவிய பிறகு, 3 வாரங்களில் நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களின் பட்டியலை SBI உருவாக்க முடியாது??
SBI க்கு இது வெட்கமற்ற கேலிக்கூத்து... வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஒரு தேசத்தின் மிகப்பெரிய வங்கி.. இவ்வளவு ஆழத்தில் மூழ்கியது ஒரு சோகம் அளிக்கிறது., ., என்று பிடிஆர் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications