புல்டோசர் அரசியல் கேவலமானது! மக்களின் கவனத்தை மடைமாற்ற வெறுப்பு அரசியல்! பாஜக மீது எஸ்டிபிஐ சாடல்!
சென்னை: புல்டோசர் அரசியல் கேவலமானது என்றும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளில் நாடு சிக்கித் தவிக்கும் நேரத்தில் அதனை மக்களிடமிருந்து மடைமாற்ற பாஜக வெறுப்பு அரசியல் செய்து வருவதாகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷாஃபி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜனவரி மாத கடும் குளிரில் 50,000 க்கும் மேற்பட்ட மக்களை வீடற்றவர்களாக ஆக்கக்கூடிய சுமார் 4,000 குடும்பங்களின் வீடுகளை இடிக்கும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு நன்றி.
உச்ச நீதிமன்ற உத்தரவு தற்காலிக நிவாரணம் அளித்தாலும், அது நிரந்தரத் தீர்வாகாது. ஏனெனில், பாஜக தனது இந்துத்துவா அரசியலுக்கு அச்சுறுத்தலாகக் கருதும் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதால் வேண்டுமென்றே முஸ்லீம் பெரும்பான்மை பகுதிகளை குறிவைக்கிறது.
உத்தரகாண்ட் ஹல்த்வானியில் உள்ள பன்பூல்புரா மற்றும் கஃபுர் பஸ்தியில் வசிப்பவர்கள் தங்களுடைய நிலத்தின் சரியான ஆவணங்களை வைத்திருப்பதாக ஆர்.டி.ஐ. பதில்கள் வெளிப்படுத்துகின்றன.
மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் ஹல்த்வானியில் வெற்றி பெற இயலாததன் விரக்திதான், அங்கு அரசியல் மக்கள்தொகையை மாற்றுவதற்கான பாஜகவின் மோசமான வடிவமைப்பின் கை வேலையாக இந்த புல்டோசர் அரங்கேற்றம் நடைபெறுகிறது.
ஏற்கனவே, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளில் நாடு சிக்கித் தவிக்கும் நேரத்தில், அதனை மக்களிடமிருந்து மடைமாற்ற, இதுபோன்ற கேவலமான அரசியல் நகர்வுகளை, வெறுப்பு அரசியலை பாஜக ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கி வருகிறது. இவ்வாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷாஃபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications