இது நியாயமா? 'அப்பட்டமான மனித உரிமை மீறல்..' - சவுக்கு சங்கருக்காக கொதித்தெழுந்த சீமான்!
சென்னை : கடலூர் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் பார்வையாளர்களை சந்திப்பதற்கு ஒரு மாத காலம் அனுமதி மறுத்திருக்கும் செயல் அப்பட்டமான மனித உரிமை மீறல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒரு மாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுக்கு சங்கர் சிறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கான பார்வையாளர் நேரம் மறுக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் மீது ஆக்ஷன்
நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து அவதுாறாகப் பேசியதாக, சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற கிளை அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. அதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மதுரை சிறையில் இருந்து கடந்த 16ஆம் தேதி, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியிடை நீக்கத்தில் இருந்த அவரை, டிஸ்மிஸ் செய்து, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை, கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டது.

சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் ஏன்
சவுக்கு சங்கரை டிஸ்மிஸ் செய்தது பற்றிய நோட்டீஸை அவர் வாங்க மறுத்ததால், சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள அறை வாசலில் ஒட்டப்பட்டது. இந்நிலையில், அவரை பார்க்க பார்வையாளர்கள் அதிகம் வருவதால், ஒரு மாதத்துக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பார்வையாளர்கள் தன்னைப் பார்க்க தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சவுக்கு சங்கர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

சீமான் கண்டனம்
இந்நிலையில், சவுக்கு சங்கர் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பி சவுக்கு சங்கர் அவர்களது பார்வையாளர் சந்திப்புக்கு ஒருமாத காலம் அனுமதி மறுத்திருக்கும் திமுக அரசின் செயல் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

மனித உரிமை மீறல்
மிகக்கொடிய குற்றங்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளுக்குமான அடிப்படை உரிமையாகச் சட்டமும், ஜனநாயக அமைப்பு முறைகளும் வழங்கியிருக்கிற பார்வையாளர் சந்திப்புக்குத் தடைவிதிப்பது என்பது ஏற்கவே முடியாத கொடுங்கோன்மையாகும்.

மோசமான நிர்வாகச் செயல்பாடு
அதிகமான பார்வையாளர்கள் வருகிறார்கள் என்பதைக் காரணமாகக் காட்டி, அவருக்கான பார்வையாளர் சந்திப்பையே முற்றாக ரத்து செய்வது எந்த வகையில் நியாயமாகும் ? பார்வையாளர்களுக்கான அனுமதியை முறைப்படுத்தி, சிறைத்துறை விதிகளின்படி சந்திப்புக்கு வழியேற்படுத்த வேண்டுமே ஒழிய, மொத்தமாகச் சந்திப்புக்கே அனுமதியில்லை என அறிவிப்பது மிக மோசமான நிர்வாகச் செயல்பாடு.

பழிவாங்கும் நோக்கம்?
கருத்துச் சுதந்திரம், தனிமனித உரிமை, ஜனநாயக மாண்பு, சமூகநீதி எனப் பேசும் திமுக அரசு, தனது ஆட்சியின் ஊழல்களையும், முறைகேடுகளையும் விமர்சித்தார் என்பதற்காகவே சவுக்கு சங்கரைப் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, சவுக்கு சங்கரின் பார்வையாளர் சந்திப்புக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஒரு மாத காலத்தடையை நீக்கி, பார்வையாளர் சந்திப்புக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்" என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications