திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கதான்.. “ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்ல”.. சீமான் அட்டாக்!
சென்னை : திராவிடம், திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள் தான். நாங்கள் வந்தபிறகே திராவிடத்தை அதிகமாக பேசுகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் சேலையூர் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறை கூட்டமைப்பு சார்பில் இமானுவேல் சேகரனாரின் 65-வது குருபூஜை விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்று, இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், திமுக சார்பில் திராவிட மாதம் கொண்டாடப்படுவதை விமர்சித்துப் பேசினார்.

திராவிட மாடல்
செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், திமுக சார்பில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி " திராவிட மாடல்" கொள்கை கோட்பாடுகள் எனும் புத்தகம் வெளியிடப்படவுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அது ஒரு வேடிக்கை. தமிழ் தேசிய இன மக்கள் எழுச்சியுற்று, தமிழ் தேசிய அரசியல் இதுவரை இந்த நிலத்தில், எங்களுடைய தாத்தாக்கள், ம.பொ.சி., சி.பா.ஆதித்தனார், பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல் தங்கம், மறைமலை அடிகள், இவர்கள் எல்லாம் முன்னெடுத்ததைத் தாண்டி, இந்த தலைமுறை பிள்ளைகள் அரசியல் களத்திற்கு வந்தபிறகு, பேரெழுச்சி நடந்து வருகிறது.

காரணமே நாங்கள்தான்
அதற்காகத்தான், இதுவரை இல்லாத வகையில், திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். திராவிடம், திராவிட மாடல் என்று பேசுவதற்குக் காரணம் நாங்கள்தான். இதனால் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். அந்த புத்தகம் வந்தால் நானும் வாங்கிப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

கட்சிகளின் தோளில் ஏறி
மேலும் பேசிய சீமான், "மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் எங்கே இருக்கிறது? சொந்த தொகுதியில் நின்று ராகுல் காந்தியால் வெல்ல முடியவில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறிக் கொண்டு அவர்கள் தயவில், ஓட்டுக்கு காசு கொடுத்து வென்று இங்கு இருக்கின்றனரே தவிர, வேறு எங்கு இருக்கின்றனர்? காங்கிரஸ் எதிர்க்கட்சியாக எங்கு இருக்கிறது?

என்ன மாற்றம் நடக்கும்?
எதிர்க்கட்சி என்பது, எத்தனை இடங்கள் வென்று உள்ளே சென்று இருக்கிறோம் என்பது அல்ல. என்னவாக இயங்குகிறோம் என்பதுதான். அவர்கள் இயங்குவதுபோல் தெரியவில்லையே? ராகுல் காந்தி நடக்கிறார், அதனால் என்ன நடக்கும்? 50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டுவர முடியாத மாற்றத்தை 5 மாதம் நடந்து கொண்டு வந்துவிடுவாரா?" என விமர்சித்தார்.

நமக்கு வேலை இருக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் ஆளுநரை சந்தித்துள்ளனரே என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், திமுக, பாஜக இருவருக்கும் வேலை இல்லை. அடிக்கடி இது போன்று வேடிக்கை காட்டுவார்கள். நமக்கு நிறைய வேலை இருக்கிறது. அவர்களை பற்றி பேசவேண்டாம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications