மதுபான கடைகள் திறப்பு- தனிமனித விலகல் சீர்குலைவு- கொரோனாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: சீமான்
சென்னை: தமிழகத்தில் வரும் 7-ந் தேதி முதல் மதுபான கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை:
தனிமனித விலகல் அவசியம்
வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானக்கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்திவிடும். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும். தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது.
கொரோனாவுக்கு சிவப்பு கம்பளம்
தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது. அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக்கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.
திரும்பப் பெற தினகரன் வலியுறுத்தல்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் (TASMAC) கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது - கண்டிக்கத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.
வெறித்தனமான குடியால் குடும்பங்கள் சீரழியும்
மகளிர் ஆயம் அமைப்பின் தலைவர் ம.லெட்சுமி வெளியிட்ட அறிக்கையில், மதுக்கடைகள் மூடப்பட்டு குடிக்காமல் இருந்தனர். தற்போது மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் பலரும் வெறியுடன் குடிக்க போகின்றனர். இதனால் குடும்பங்களில் அமைதி சீரழியப் போகிறது. கரோனா பரவலுக்கான பாதையை தமிழக அரசே திறந்துவிடுவது போல மதுபானக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.