அறநிலையத்துறையை கலைக்கச் சொன்ன மதுரை ஆதினம்..சேகர்பாபு சொன்ன பதில் இதுதான்
யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதினங்கலையும், ஜீயர்களையும் தீட்சிதர்களையும், குறை சொல்வது ஏற்புடையதல்ல என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை: மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவும் தனக்கு உண்டான செய்தி தொடர்ந்து வெளியாக வேண்டும் என்பதற்காக அவர் சொல்கிறார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதினங்களையும் ஜியர்களையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல எனவும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சாமி தரிசனம் செய்ய வந்தார் அவருடன் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மற்றும் அதிகாரிகளுடன் வந்தனர்.
நடராஜர் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவை தீட்சிதர்கள் வரவேற்று அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வைத்தனர். பின்னர் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர் இதை அடுத்து நடராஜர் கோயிலுக்குள் உள்ள பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு அங்கும் சாமி தரிசனம் செய்தார் பின்னர் நடராஜர் ஆலய ஆயிரங்கால் மண்டபத்தில் சிறிது நேரம் தரையில் அமர்ந்தார் அப்போது நடராஜர் கோயில் தீட்சிதர்களும் அவருடன் தரையில் அமர்ந்திருந்தனர்.

தீட்சிதர்களுடன் சேகர்பாபு பேச்சு
அப்போது கோயிலின் நிர்வாகம் எப்படி நடைபெற்று வருகிறது கோயில் பூஜைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து தீட்சிதர்கள் அமைச்சர் பாபுவிற்கு விளக்கமளித்தனர். அவற்றை அமைச்சர் சேகர்பாபு பொறுமையாக கேட்டுக் கொண்டார். அப்போது கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து குறித்தும் விளக்கம் அளித்தனர்.

ஒத்துழைப்பு கொடுங்கள்
அப்போது அமைச்சர் சேகர்பாபு தீட்சிதர் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார். அதனால் கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழுவிற்கு ஒத்துழைப்பு அளியுங்கள் எனவும் கூறினார். எதையுமே தடுப்பதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கோவிலை விட்டு வெளியே வந்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.

சமமான நீதி தரும் அரசு
தீட்சிதர்கள் சம்பந்தப்பட்ட அவர்களது கோரிக்கையையும் அரசின் நிலைப்பாடும் பகிர்ந்து கொண்டோம் இந்து அறநிலைத்துறை சட்டதிட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும் எந்த அளவிலும் சிறு மனக்கஷ்டம் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் அன்பான வேண்டுகோள்.
சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக நல்ல ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என எனக்கு தோன்றுகிறது. தீட்சிதர்கள் அறநிலைய துறை அதிகாரிகள் இருவரின் நிலைப்பாடுகளையும் கேட்டுள்ளோம், இந்த ஆட்சியை பொருத்தவரை அனைவருக்கும் சமமான நீதி வழங்க வேண்டும் என்ற ஒரு அரசாக செயல்பட்டு வருகிறது.

எதிர்மறை கருத்துக்கள்
மதுரை ஆதீனம் சர்ச்சைக்குரிய முறையில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சேகர்பாபு, மதுரை ஆதினம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு செய்திகளை தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்பதற்காக அவர் சொல்லுகிறார் அவர் ஒருவர் மட்டும்தான் அப்படி சொல்கிறார் தவிர இன்றைக்கு எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் தீட்சிதர்கள் என்னோடுதான் இருக்கின்றனர்.

மதுரை ஆதினம்
நேற்று முன்தினம் கூட தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றிருந்தோம் அவர் நல்ல முறையில் உபசரித்தார் இருபத்தி ஆறு ஆயிரம் மரக்கன்றுகள் நடுகின்ற திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் துவங்கி வைத்தார். தர்மபுரம் ஆதினம் சார்பில் இருபத்தி நான்கு அறைகளை என்னை கொண்டு திறக்க வைத்தார். யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதினங்கலையும், ஜீயர்களையும் தீட்சிதர்களையும், குறை சொல்வது ஏற்புடையதல்ல அனைவரும் தமிழக முதல்வரின் பக்கம் தான் இருக்கிறார்கள், ஆகவே ஏதோ ஒரு ஆதீனம் பேசுவதற்காக அதற்கெல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications