கல்லறைக்குள்ளே சிரித்து மகிழடி செங்கொடி... உன் அண்ணன் பேரறிவாளன் விடுதலையாகி சிறை கதவு திறந்து காண்!
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை வலியுறுத்தி 11 ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண் செங்கொடி தீக்குளித்து உயிர் தியாகம் செய்தது உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்று எந்த கனவுகளுக்காக எந்த கோரிக்கைக்காக செங்கொடி தீக்குளித்து மாண்டாரோ இன்று அந்த கோரிக்கை நிறைவேறி பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
Recommended Video
ILTS தலைவரான முதல் ஆசியர் “பிறந்து 5 நாளே ஆன குழந்தை” உயிரை காப்பாற்றியவர் - யார் இந்த முகமது ரேலா?
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்திருந்தனர். ஆனால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கருணை மனுக்கள் மீது ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள் எந்த முடிவும் எடுக்காமலேயே இருந்தனர்.
தூக்கு ஏற்பாடுகள்
2011-ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் பேரறிவாளன் உள்ளிட்டோர் கொடுத்திருந்த கருணை மனுவை தள்ளுபடி செய்து அறிவித்தார். ஆகஸ்ட் 12-ந் தேதி 7 பேரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் செப்டம்பரில் பேரறிவாளன் உள்ளிட்டோர் தூக்கிலிடப்படுவர் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துப் போனது. தமிழகம் முழுவதும் தமிழர் தூக்கை ரத்து செய்யக் கோரி உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
செங்கொடி தீக்குளிப்பு
இப்போராட்டங்களின் உச்சமாக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந் தேதி காஞ்சிபுரத்தில் 21 வயது இளம்பெண், காஞ்சி மக்கள் மன்றத்தின் சமூக செயற்பாட்டாளர் பறை இசைக் கலைஞர் என பன்முகம் கொண்ட செங்கொடி தீக்குளித்து தன்னையே மாய்த்துக் கொண்டார். தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காக தமது உயிரையே தீக்கு தாரை வார்த்துக் கொடுத்த செங்கொடியின் தியாகம் உலகம் முழுவதும் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உச்ச தியாகம்
மொழி ஆதிக்க எதிர்ப்புக்காக, ஈழத் தமிழர்களுக்காக, தமிழர் உரிமை பிரச்சனைகளுக்கு தங்களது தேக்குமர தேகங்களை தின்ன கொடுத்த தமிழகத்தில் இளம் பெண் தம்மையே தீக்கு கொடுத்து அண்ணன்கள் விடுதலையே இலக்கு என செத்து மடிந்தது தமிழர் வரலாற்றில் ஆகப் பெரும் தியாகமாகும்.
செங்கொடி இல்லம்
செங்கொடியின் இறுதி பயணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்று தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்த செங்கொடியின் நினைவாகவே பேரறிவாளனின் ஜோலார்பேட்டை இல்லத்துக்கு செங்கொடி இல்லம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.
இதோ பேரறிவாளன் அடைக்கப்பட்ட சிறை கதவுகள் திறந்துவிட்டன.. இன்று பேரறிவாளனை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தன்னுயிரையே தாரைவார்த்த அண்ணனுக்காக தீக்குளித்த இளம்பெண் செங்கொடியின் தியாகம் வீணாய் போய்விடவே இல்லை! இப்போது கல்லறைக்குள் இருந்தபடியே சிரித்து மகிழடி செங்கொடி! உன் பறை இசைத்து கொண்டாடடி பெண்ணே!