தவெகவில் செங்கோட்டையனுக்கு ஏக மரியாதை.. வாசலுக்கு வந்து அழைத்துச் சென்ற புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா!
சென்னை: இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். முன்னதாக, பனையூர் அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையனை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வாசலுக்கு வந்து அழைத்து சென்றனர்.
அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைப்பை வலியுறுத்தி, அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக் கெடுவை விதித்தார். இதன் காரணமாக செங்கோட்டையன் கட்சிப் பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

அதோடு, அதிமுகவிலிருந்து ஏற்கெனவே பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பசும்பொன்னில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார் செங்கோட்டையன். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், நேற்று சென்னை தலைமைச் செயலகம் வந்தார். சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து, தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோருடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலை 4.30 மணி அளவில் பட்டினம்பாக்கம் சென்று விஜயை செங்கோட்டையன் சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து பணியாற்றுவார் என்றும், அவர் நேரடியாக விஜய்யுடன் தொடர்பு கொண்டு ரிப்போர்ட் செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சார்ந்த விஷயங்கள் தொடர்பாக இரண்டாம் கட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக தவெக தலைவர் விஜய்யுடன் பேசும் வகையில் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று தவெகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு வருகை தந்த செங்கோட்டையனை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வாசலுக்கு வந்து அழைத்து சென்றனர். பேருந்தில் வந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் புஸ்ஸி ஆனந்த் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அனுபவமும், ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைக்கும் அனுபவமும், 38 ஆண்டு காலம் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவருமான செங்கோட்டையனுக்கு தவெகவில் உரிய மரியாதை அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications