இப்படியா பேசுவது.. 'செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும்'- கோவை செல்வராஜ் பரபர
சென்னை: நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான்... தங்கள் சாதியை சேர்ந்தவர் தான் முதல்வராக முடியும்... என்று செங்கோட்டையன் பேசிய நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ், ஜாதி குறித்து பேசிய செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் என்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ''நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான்... தங்கள் சாதியை சேர்ந்தவர் தான் முதல்வராக முடியும்... ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க முடியும்.. இரண்டு கத்திகள் இருக்க முடியாது... எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர்" என்று பேசினார்.
இவரது பேச்சு சர்ச்சை ஆன நிலையில், செங்கோட்டையன் பேச்சுக்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மிகவும் கண்டிக்கத்தக்கது
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஜாதியை பார்த்து யாருக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். கட்சியின் விசுவாசத்தை பார்த்துதான் வாய்ப்பு கொடுப்பார்கள். ஜாதி அடிப்படையில் பார்க்காமல் தொண்டர்களுக்காக கட்சிக்கு உழைத்தவர்களுக்குதான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் செங்கோட்டையன் இவ்வளவு கேவலமாக ஜாதி வெறியோடு நடந்து கொண்டது மிகவும் கண்டித்தக்கது.

சசிகலா தான் அமைச்சர் பதவி கொடுத்தார்
வருத்தத்துக்கு உரிய விஷயம். எதற்காக இப்படி செங்கோட்டையன் பேசினார் என்று தெரியவில்லை. அவருக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு கொடுத்ததே சசிகலாதான். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுபேற்ற போது மாஃபா பாண்டியராஜன் வெளியேறியதால் அவர் வகித்து வந்த பதவியை சசிகலா செங்கோட்டையனுக்கு கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி இந்த பதவியை கொடுக்கவில்லை. எதற்காக ஜாதி வெறியோடு செங்கோடையன் பெசுகிறார் என்று தெரியவில்லை.

அதிமுகவில் இதுவரை ஜாதி பார்க்கபட்டது இல்லை
தமிழ்நாட்டில் எல்லா சமுதாய மக்களும் வாழ்கிறோம். அதிமுகவில் இதுவரை ஜாதி பார்க்கபட்டது இல்லை. ஜாதியை பற்றி யாரும் பேசியது இல்லை. ஜெயலலிதாவும் பேசியது கிடையாது. எல்லா சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால், இந்த ஜாதியை தவிர வேறு யாரும் முதல்வராக வர முடியாது என்று செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். உண்மையான மனிதராக இருந்தால் சுப்புலட்சுமி ஜெகதீஷன் திமுகவில் இருந்து வெளியேறியது போல செங்கோட்டையனும் அவராகவே வெளியேற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்
இல்லாவிட்டால் இதுதான் கடைசி தேர்தலாக உங்களுக்கு இருக்கும். ஒருநாளும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. எதற்காக இப்போது ஜாதி வெறியோடு பேசுகிறார்கள். பொதுக்கூட்டத்திலேயெ ஜாதியை பற்றி பேசுபவர்கள்.. கவுண்டர்களை தவிர வேறு எந்த ஜாதிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்களா.. எடப்படி பழனிசாமியும் ஜாதி வெறியோடு செயல்படுகிறார். அதை வெட்ட வெளிச்சமாக இவர் சொல்கிறார். அதிமுகவை அழிப்பதற்கென்று இவர்கள் இப்படி செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லியாக வேண்டும்












Click it and Unblock the Notifications