திமுகவில் மாவட்டங்களை தாண்டி விஸ்வரூபமெடுக்கும் செந்தில்பாலாஜி.. சீனியர்களிடையே சலசலப்பு
சென்னை: திமுகவில் தமது கரூர்,சேலம் மாவட்டத்தைத் தாண்டி அமைச்சர் செந்தில்பாலாஜியின் கை ஓங்கி வருவது அக்கட்சியில் சீனியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுக, அமமுகவில் பயணித்து கடைசியாக திமுகவில் கரைசேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இதே செந்தில் பாலாஜி மீது திமுக ஏற்கனவே ஊழல் புகார்களையும் கூறியிருந்தது.

அணில் சர்ச்சை
தற்போதைய திமுக ஆட்சியில் வளமான மின்சார துறை அமைச்சர் பதவியும் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மின்வெட்டுக்கு அணில்களும் காரணம் என செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்துகள் மீதான சர்ச்சை இன்றளவும் ஓயவில்லை.

சேலம் பொறுப்பாளர்
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் திமுகவில் தன்னுடைய ரேங்க்கை வலிமைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் சேலம் மாவட்ட பொறுப்பாளர் பதவியும் செந்தில் பாலாஜியை தேடி வந்தது.

அமமுக டூ திமுக
இப்போது சலங்கை கட்டிவிட்ட நிலையாக சடுகுடு ஆட்டத்தை ஆடி வருகிறார் செந்திலார். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆகப் பெருந்தலைகள் என கருதப்பட்ட பழனியப்பன் உள்ளிட்ட பலரையும் திமுகவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

அதிருப்தியில் சீனியர்கள்?
இங்கேதான் திமுகவின் சீனியர்கள் சலசலப்பு காட்ட தொடங்குகின்றனர். அதாவது வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள அமமுக பிரமுகர்களை திமுகவுக்கு தூக்கி வருகிறார் செந்தில் பாலாஜி. ஆனால் அப்படி தூக்கி வரும் பிரமுகர்களின் மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், சீனியர்கள் யாரிடமும் செந்தில் பாலாஜி கலந்துபேசுவதில்லை.

நிர்வாகிகளும் சலசலப்பு
அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரியாமல் அறிவாலயத்துக்கு வரவழைத்து திடீரென திமுகவில் அமமுகவினரை சேர்த்துவிடுகிறார் செந்திலார். இப்படி எல்லாம் தன்னிச்சையாக செந்தில்பாலாஜி செயல்பட்டால், அவர் சேர்க்கும் அமமுக பிரமுகர்களுடன் எப்படி கட்சி நிர்வாகிகள் இணைந்து செயல்படுவர் என்கிற கேள்வியை முன்வைக்கின்றனர் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications