‘நீங்க சொல்ற கடவுள்கள் உயிருடன் இருக்கிறார்களா?’ - ஆளுநர் ரவிக்கு ஆர்டிஐ மூலம் கேள்வி.. பரபரப்பு!
சென்னை : சனாதன தர்மம் என்றால் என்ன? ஹிந்து என்பது யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பியுள்ளார்.
நீங்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரா? பெரியாரின் கொள்கைகளையும் அவர் கற்பித்தவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்கீறீர்களா? இல்லை என்றால் ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார் துரைசாமி.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து சனாதன தர்மம், இந்து தர்மம் பற்றி பேசி வருவது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ஆளுநர் ரவி, மதவாதக் கருத்துகளைப் பேசி வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஸ்கூல் ஓனரின் “2 மகன்கள்” எங்க? ரிப்போர்ட கவனிசீங்களா? கள்ளக்குறிச்சி மாணவி தரப்பு வழக்கறிஞர் வாதம்
சர்ச்சையில் சிக்கி வரும் ஆளுநர்
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், திராவிடத்திற்கு எதிராகவும், சனாதனத்திற்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பேசுவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அரசியல் சாசனத்துக்கு எதிராக, ஆளுநர் மத ரீதியிலான கருத்துகளைத் தெரிவிப்பது அவ்வப்போது விவாதங்களைக் கிளப்பி வருகிறது.
மூத்த வழக்கறிஞர் கேள்வி
இந்நிலையில், சனாதன தர்மம், இந்துதர்மத்தின் அர்த்தம் ஆகியவை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆளுநர் ரவி பேசி வரும் சனாதன தர்மம் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடவுள்கள் இருக்கிறார்களா?
வழக்கறிஞர் துரைசாமி அனுப்பியுள்ள ஆர்டிஐ மனுவில், "சனாதன தர்மம் என்றால் என்ன? சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்கள் இருக்கின்றனரா, அல்லது வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டார்களா? கடவுள்கள் இருக்கின்றார்கள் என்றால், எங்கு வசிக்கிறார்கள் அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகள் என்னென்ன? அவர்களுக்கு யார் உடைகளை தைத்துக் கொடுப்பது? அவர்கள் உடைகள் மற்றும் நகைகளை எங்கே வாங்குகிறார்கள்?
அரசியலமைப்பு மீறல் ஆகாதா?
அமைச்சரவையின் அல்லது அரசின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் விரும்பியதெல்லாம் பேசுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு இடம் கொடுத்துள்ளது? அரசின் அல்லது அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் விரும்பியதெல்லாம் பேசுவதற்கு அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்காதபோது, நீங்கள் இவ்வாறு பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது ஆகாதா?
சனாதன தர்மத்தை கண்டறிந்தது யார்?
ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு ஹிந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா? சனாதன தர்மம் பற்றி ஏதேனும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது வெறுமனே செவிவழிச் செய்தி தானா? சனாதன தர்மத்தை கண்டறிந்தது அல்லது எழுதியது யார்? சனாதன தர்மம் பற்றி தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்டுள்ளதா? திராவிட வரலாற்றில் இடம்பெற்றிருந்ததா?
இந்து என்பது யார்?
இந்து என்பது யார்? ஏதேனும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஹிந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா? ஹிந்து என்ற வார்த்தையை கண்டறிந்தது யார், அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதா? பெர்சிய மொழி அகராதியில் ஹிந்து என்றால் திருடன் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ளதே அது சரியா?
வர்ணங்கள்
சனாதன தர்மத்தை உலகில் எந்த நாட்டிலாவது பின்பற்றுகிறார்களா? சனாதன தர்மத்தை கிறிஸ்தவர்களோ இஸ்லாமியர்களோ பின்பற்றுகிறார்களா? இந்து மதத்தில் நான்கு வர்ணங்களை யார் உருவாக்கியது? நீங்கள் சதுர் வர்ண தர்மாவை பின்பற்றுகிறீர்களா,அதை கடைபிடிக்கிறீர்களா? சதுர் வர்ன தர்மா ஏன் மற்ற மதங்களால் பின்பற்றப்படவில்லை?" ஆகிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.