நாடகமாடும் அதிமுக- பாஜக.. மீண்டும், மீண்டும் பொய் சொல்லி ஏமாற்ற துடிக்கும் ஓபிஎஸ்! துரைமுருகன் சாடல்
சென்னை: அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என இங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நீட் தேர்வு நடைபெறுவதால் எந்தவொரு மாநிலத்திற்கும் இதில் இருந்து விலக்கு தர முடியாது என்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
"நீட் தேர்வு ரத்து.. அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்.." ஓபிஎஸ் திட்டவட்டம்
நீட் விலக்கு
இந்தச் சூழலில் கடந்த ஆண்டு செப். மாதம் நீட் விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் முழு மனதாக நிறைவேற்றப்பட்டது. நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் தாமதம் செய்து வந்தார். இது தொடர்பாகத் தமிழக எம்பிக்கள் உள் துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தனர்.
ஆளுநர்
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை, ஆளுநர் ஆர்.என். ரவி இந்த நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநரைத் திருப்பப் பெற வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கோஷம் எழுப்பினர்.
ஓபிஎஸ் அறிக்கை
இந்தச் சூழலில் நீட் விலக்கு தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாகப் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
துரைமுருகன் பதிலடி
இந்நிலையில், இதற்கு திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். நீட் விவகாரத்தில் அதிமுகவும். பாஜகவும் நாடகமாடுவதாக அமைச்சர் துரைமுருகன் சாடியுள்ளார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்களும் மாணவர் சமூகத்தினரும் தக்க பதிலடி தருவார்கள் என்றும் விமர்சித்துள்ளார். நீட் விவகாரத்தில் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி ஓபிஎஸ் ஏமாற்றத் துடிக்கிறார் என்று சாடியுள்ள துரைமுருகன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்,
துரைமுருகன் அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசால் 2010ல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோதே மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவைத் திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்காது என்று அதிமுக அரசின் 10 ஆண்டு தோல்வியை மறைக்கக் கூவத்தூர் கொண்டாட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற அதிமுக ஆட்சியில் நீட் தேர்வினைச் செயல்படுத்தி மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த அதிமுக ஆட்சியில் துணை முதல்வர் என்ற பதவி சுகத்தை அனுபவித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மீண்டும், மீண்டும் பொய்யைச் சொல்லி பொதுமக்களை ஏமாற்றத் துடிக்கும் பன்னீர்செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது.
Recommended Video
திமுக அரசு
திமுக ஆட்சி நடைபெற்றபோதுதான் அதுவும் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தவரை நீட் நுழையவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு திமுக ஆதரவளித்த காலகட்டத்தில்தான் திமுக ஆட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்விற்குத் தடை வாங்கியது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் 18.7.2013 அன்று நீட் தேர்வு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து நீட் தேர்வே ஒழிக்கப்பட்டது. ஆகவே நீட் தேர்வுப் பிரச்சினை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்து நீட் தேர்வு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அன்றாட அரசியலைக் கவனிப்பதில் கோட்டை விட்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றிருந்த அதிமுக ஆட்சிக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.