சோழிங்கநல்லூர் டூ பல்லாவரம் பார்த்தீங்களா.. மடிப்பாக்கத்தில் காலையில என்னாச்சு.. விழிபிதுங்கிய மக்கள்
சென்னை: சென்னையிலும், அதனை சுற்றியுள்ள புறநகர்ப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்த நிலையில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதையொட்டி, மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

ஒரு வாரம் மழை: அடுத்த ஒரு வாரத்துக்கு, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்த நிலையில், வானிலை மையமும், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம்..
இதேபோல, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம்: இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென நள்ளிரவு முதல் மழை கொட்ட துவங்கியது.. இடி-மின்னலுடன் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
அதிகாலை: இன்று அதிகாலையிலும் மழை நிற்கவில்லை.. காலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வடபழனி, வேளச்சேரி, அடையாறு, தாம்பரம், போரூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
அதேபோல, சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய தாம்பரம், பூந்தமல்லி, புழல், செங்குன்றம், மதுரவாயல், போரூர், கீழ்க்கட்டளை, பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதியிலும் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழையாகவும், சில பகுதிகளில் லேசாகவும் மழை பெய்தது.
அண்ணா சாலை, கோட்டூர்புரம், நந்தனம் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைப்பெய்தது.. இதன்காரணமாக, சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் உடனடியாக வடிந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது..

புதுப்பேட்டை: ஆனால், புதுப்பேட்டை லேங்க்ஸ் தோட்டச்சாலை, கோபாலபுரம் விளையாட்டு மைதானம், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலக வளாகம், அவ்வை சண்முகம் சாலை, அண்ணா சாலை உட்ஸ் ரோடு, ராயப்பேட்டை பகுதி, கோயம்பேடு சந்தை என பல்வேறு முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
வேண்டுகோள்: முக்கியமாக, மடிப்பாக்கம் பகுதியில் அளவுக்கு அதிகமான மழைநீர் தேங்கி நின்றது.. ராம் நகர், ராஜாஜி நகர், குபேரன் நகர், எல்ஐசி நகர் போன்ற பகுதிகளிலும் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதியடைந்தனர்.
மழைநீரை நீண்ட நேரமாக அகற்ற நடவடிக்கை இல்லாமல் அவதிக்கு ஆளாகினர்.. இனிவரும் நாட்களில் மழை தீவிரமாகும் என்பதால், மேற்கண்ட பகுதிகளில் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும், கிளாம்பாக்கம் பணிகளை போலவே, இந்த பகுதிகளிலும், வடிகால் வசதிகளை சரிசெய்ய வேண்டும் என்று அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications