காற்றோடு கலந்த குரல்.. பாடகி வாணி ஜெயராம் மறைவு.. தமிழில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி.. உருக்கம்
தமிழ்நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ் உள்பட 19 மொழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய பிரபல பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலமானார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியில் வாணி ஜெயராம் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராம். வயது 78. இந்தியாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை வாணி ஜெயராம் பாடியுள்ளார்.
முறைப்படி சங்கீதம் கற்று தேர்ந்த வாணி ஜெயராம் பாடகியால் மக்கள் மத்தியில் ஜொலித்தார். இவரது பாடல்கள் அனைத்தும் மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் உள்ளது. தனது இனிமையாக குரலில் 19 மொழி பேசும் ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமைக்கு சொந்தக்காரராக வாணி ஜெயராம் இருந்தார்.
‛‛இசை உலகில் அவரது பாரம்பரியம் இருக்கும்’.. வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேரில் அஞ்சலி
காலமான வாணி ஜெயராம்
தமிழ் உள்பட தான் பாடும் அனைத்து மொழிகளிலும் வார்த்தைகளின் அர்த்தம் அறிந்து ரசணையாக பாடி மக்களை கவர்ந்தார். இந்நிலையில் தான் வாணி ஜெயராமை பெருமைப்படுத்தும் வகையில் சமீபத்தில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 78.
நெற்றியில் காயம்
அதாவது இன்று காலையில் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வந்த பணிப்பெண் போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வாணி ஜெயராம் தனது வீட்டின் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது நெற்றியில் காயமிருந்த நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
வீட்டில் அஞ்சலி
உடலில் காயம் இருந்ததால் வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும் அவரது உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்என் ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். அரசியல்வாதிகள், கலைத்துறையை சேர்ந்தவர்கள் வாணி ஜெயராமுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு தமிழ் மொழியில் அஞ்சலி செலுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி'' என தெரிவித்துள்ளார். இதேபோல் ஆங்கிலத்திலும் அவர் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
ஆளுநர், முதல்வர் இரங்கல்
முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்த இரங்கலில், ‛‛பழம்பெரும் பாடகியும், சமீபத்தில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டவருமான வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும்'' என தெரிவித்து இருந்தார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛ 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் வாணி ஜெயராம். அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது தான் வாழ்த்து தெரிவித்து இருந்தேன். விருது பெறும் முன்னரே இவ்வுலகை அவர் விட்டுப் பிரிந்தது பெரும் துயரம். வாணி ஜெயராமின் மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.