ஒற்றை தலைமை விவகாரம்..ஓபிஎஸ் வீட்டில் நீடிக்கும் ஆலோசனைகள்.. இபிஎஸ் வீட்டில் குவிந்த தொண்டர்கள்
ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் இன்று ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் 8 வது நாளாக தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர். பசுமை வழிச்சாலையில் குவிந்துள்ள தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என்று ஓபன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் ,எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றனர். போஸ்டர் யுத்தம் வெடித்த நிலையில் நேருக்கு நேராக வார்த்தை யுத்தங்களும் வெடித்துள்ளன.
ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் முற்றிலுமாக நிராகரித்து விட்டார். இரட்டை தலைமைதான் வேண்டும் என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களின் நிலைப்பாடு. அதிமுக கட்சியை பிளவுபடுத்த எடப்பாடி அணியினர் சதி செய்வதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

8வது நாளாக ஆலோசனை
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடப்பதற்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் ஒற்றை தலைமை பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் இன்று 8வது நாளாக ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி மேற்கொண்டனர்.

இபிஎஸ் வீட்டிற்கு வருகை
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வருகை தந்தார். வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்.பி.தர்மர் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் முன்பாக ஏராளமான தொண்டர்கள் பதாகைகளுடன் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இபிஎஸ்க்கு ஆதரவாக முழக்கமிட்டு வருகின்றனர்.

மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 64 மாவட்ட செயலாளர்களும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக 11 மாவட்ட செயலாளர்களும் ஆதரவாக இருந்ததாக தகவல் வெளியானது. இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவு நிலையில் இருந்த மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி வருகின்றனர். இன்றைய தினம் நெல்லை மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேஷ ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர்.

அதிமுக பொதுக்குழு கூடுமா?
அசாதாரணமான சூழல் நிலவுவதால் அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் கடிதத்தை பார்க்கவேயில்லை என்று கூறும் இபிஎஸ் தரப்பினரோ திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூடும் என்று தெரிவித்துள்ளதோடு பொதுக்குழு எடுக்கும் முடிவை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஒத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மாறி மாறி ஆலோசனைகள் நடைபெறுவதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications