ஓட்டு போட மட்டும்தான் வாக்காளர்களா? அதிமுகவை லோக்சபாவில் இருந்தே காலி செய்த ஒற்றை வாக்காளர் மிலானி!
சென்னை: இந்திய ஜனநாயக களத்தைப் பொறுத்தவரை தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே வாக்காளரின் உரிமை அல்ல, ஒரு வாக்காளர் நினைத்தால், ஒரு எம்.பியின் பதவியையே பறிக்க முடியும் எனக் காட்டியிருக்கிறது தேனி எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வழக்கில் ஐகோர்ட் இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பு.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார் என்றும், எனவே தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம், மக்களவையில் எம்.பி இல்லாத கட்சியானது அதிமுக. 2019 மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதன் மூலம், அதிமுகவுக்கு லோக்சபாவில் இடமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை, 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பியாக இருந்த நிலையில், அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான மிலானியின் ஒற்றை மனுவால் அவரது எம்.பி பதவி பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications