சேத்துப்பட்டை துளைக்க தொடங்கிய 'சிறுவாணி'! இன்னும் 12 கி.மீ பெண்டிங் இருக்கு! மொத்தமாக மாறும் சென்னை
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் பூமிக்கடியில் துளையிடுவதற்கு எல்&டி நிறுவனம் சிறுவாணி எனும் பிரமாண்ட துளையிடும் மெஷினை களத்தில் இறக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்னை மெட்ரோ அமைப்பு. இது தற்போது புளூ லைன் 1 மற்றும் கிரீன் லைன் 2 என இரண்டு பயன்பாட்டு மெட்ரோ பாதைகளையும் மூன்று கட்டுமானப் பாதைகளையும் கொண்டிருக்கிறது. தற்போது பர்பிள் லைன் 3 திட்டம் கட்டுமானத்தில் உள்ளது. இது சிறுசேரி சிப்காட் II-லிருந்து மாதவரம் பால் பண்ணை வரை செல்லும். இந்த வழித்தடங்களில் மொத்தம் 48 நிலையங்கள் இருக்கும். இவற்றில், 29 நிலத்தடியிலும், 19 உயர்மட்டமாகவும் அமைக்கப்படுகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் மெட்ரோ தடங்களை அமைக்கும் பணிகள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு டென்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கெல்லீஸ் தொடங்கி தரமணி சாலை சந்திப்பு வரை 12 கி.மீ நீளத்திற்கு பூமிக்கடியில் மெட்ரோ ரயில் பாதையை அமைக்கும் பணியை எல்&டி நிறுவனம் கையில் எடுத்திருக்கிறது. இந்த பணிகள் நிறைவடைய சுமார் 15 மாதங்கள் வரை ஆகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 12 கி.மீ பாதையில் சுமார் 16 நிறுத்தங்கள் வருகின்றன.
கெல்லீஸ், கேம்சி, சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங் ரோடு ஜங்கஷன், நுங்கம்பாக்கம், ஜெமினி, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் மெட்ரோ, மந்தைவெளி, பசுமை வழிச்சாலை, அடையார் ஜங்ஷன், அடையார் டெப்போ, இந்திரா நகர், திருவான்மியூர் மெட்ரோ, தரமணி சாலை சந்திப்பு என மொத்தம் 16 நிறுத்தங்கள் வருகின்றன. இந்த 12 கி.மீ நீளத்தில் இரண்டு வழி சுரங்கப்பாதை அமைப்பது மட்டுமல்லாது, சுற்று சுவர் கட்டுவது வரை அனைத்து பணிகளையும் எல்&டி நிறுவனம்தான் மேற்கொள்கிறது.
இந்நிலையில் இதற்கான பணிகளை தற்போது சேத்துப்பட்டிலிருந்து இந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இதற்காக சிறுவாணி என பெயரிடப்பட்ட டிபிஎம் டிஇசட் 1040 இயந்திரத்தை நேற்று இயக்க தொடங்கியுள்ளது. இந்த இயந்திரம் சீனா ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் ஹெவி இண்டஸ்ட்ரி (CRCHI) மூலம் தயாரிக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு சோதனை செய்து பார்க்கப்பட்ட பின்னரே இந்த திட்டத்திற்காக சிறுவாணி இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக சேத்துப்பட்டிலிருந்து ஸ்டெர்லிங் ரோடு நோக்கி நகர்ந்து வருகிறது.
மொத்தமாக சேத்துப்பட்டில் தொடங்கி தரமணி வரை மெட்ரோ ரயிலுக்கான பாதையை அமைக்க ரூ.2385 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல 42 மாதங்கள் இதற்காக காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீலகிரி எனும் ராட்சச துளையிடு இயந்திரத்தை கொண்டு மாதாவரம் பகுதியில் வெற்றிகரமாக துளையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications