சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைப்பு - சிபிசிஐடி விசாரணையில் சொன்னது என்ன?
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சிபிசிஐடி விசாரணை முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் சிவசங்கர் பாபாவிடம் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்ட பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு நாள் விசாரணையிலேயே போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தலைமறைவானார்.
சிவசங்கர்பாபா வெளிநாடு தப்பிக்காமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறையினரின் உதவியுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

சிவசங்கர் பாபா கைது
மொட்டை அடித்துக்கொண்டு தனது அடையாளத்தையே மாற்றியிருந்தார் சிவசங்கர் பாபா. தமிழகத்திற்கு கொண்டு வந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிசிஐடி போலீசார். ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தள்ளுபடி செய்த நீதிபதி, ஜூலை 1ஆம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சிவசங்கர்பாபாவிற்கு பாதிப்பு
சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த சூழ்நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்படவே சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிவசங்கர் பாபா. சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் சரியாகவே அவரை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சிபிசிஐடி விசாரணை
சிவசங்கர் பாபாவை கைதியாக அவரது சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பாபாவின் சொகுசு அறை, மாணவிகளின் விடுதிகள், பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.

கும்பிட்ட பெண்கள்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவை, அங்கு கூடியிருந்த பெண்கள் கையெடுத்து கும்பிட்டுள்ளனர். சிபிசிஐடி காவல்துறையினர் கேட்ட பல கேள்விகளுக்கு கண்ணீரை மட்டுமே பதிலாக கொடுத்தாராம் சிவசங்கர் பாபா. தான் குற்றமற்றவர் என்றும் தன்மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறினாராம் சிவசங்கர் பாபா.
Recommended Video

லேப்டாப் ஆதாரம்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது பற்றி சிவசங்கர் பாபாவிடம் இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையில் ஒரு லேப்டாப் சிக்கிய நிலையில் சொகுசு அறையில் மேலும் ஒரு லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை முடிந்தது
3 நாள் காவலில் ஒருநாள் மீதம் இருந்த நிலையில் சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள் விசாரணையிலேயே போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு தந்த நிலையில் உடல் நிலை கருதி சிவசங்கர் பாபா சிறையிலடைக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications