அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம்.. ரூ.40 ஆயிரம் வரை போதை மாத்திரைகள் விற்பனை.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னையில் போதை மாத்திரைகளை ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யபட்டனர். வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்த 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்

அவர்கள் மன நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. போதை மாத்திரைகள் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொருக்குப்பேட்டை பகுதியில் முகமது அசாருதீன் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமலேயே வேறு ஒருவர் பெயரில் மருந்து கடை வைத்து கடந்த இரண்டு வருடங்களாக போதை மாத்திரைகளை வழங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
முகமது அசாருதீன் போதை மாத்திரைகளை ரூ.1500-க்கு வாங்கி இந்த நபர்களுக்கு 5,000 ரூபாய்க்கு வழங்கியது தெரியவந்தது. இந்த நபர்கள் அதனை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்று வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொருக்குப்பேட்டைபகுதியை சேர்ந்த போலி மருந்து கடை உரிமையாளர் முகம்மது அசாருதீன்(30), விக்னேஷ்(25) கார்த்திக் என்ற டியோ கார்த்தி(25), முகமது (23) ரங்காநாதன்(29) தினேஷ் குமார் (27) ஆகிய 6 பேரை கைது செய்து போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போதை தடுப்பு பிரிவு போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணை நடத்த இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications