"சமூக நீதியை இன்றைய காலத்திற்கு ஏற்ப கட்டமைக்க வேண்டும்" திமுக எம்பி கனிமொழி அதிரடி!
சென்னை: சமூக நீதியை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணங்களை தடுத்தல், இளைஞர் பரிந்துரைஞர்களை ஊக்குவித்தல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தின் குற்றவியல் துறை, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு உள்ளிட்டோர் இணைந்து நடத்தினர். இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கனிமொழி பேச்சு
இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், சமூக நீதி என்று பேசும் போது ஆண், பெண் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். ஜாதி மதம் என பிறப்பால் உருவாகும் பாகுபாடுகள் இருக்க கூடாது. சுய மரியாதையோடு கூடிய சமூகத்தை இயக்க வேண்டும் என்பது தான் சமூக நீதி. இதில், குழந்தைகளை சேர்ப்பதில்லை. வயதின் அடிப்படையில் இந்த பாகுபாடு ஏற்படுகிறது. ஒருவர் நமக்கு பிறகு பிறப்பதால் உரிமை மறுக்கப்படுதை கவனத்தில் கொள்வதில்லை.
பாலியல் வன்முறை
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அதிகம் செல்போன் பயன்படுத்தப்படுவது தான் காரணம் என தொழில்நுட்ப வளர்ச்சி மீது பழி போடுகிறோம். இப்போதுதான் இதுபோன்ற வன்முறை குறித்து பேச தொடங்கியுள்ளோம். ஒரு அறையில் உள்ள 10 பேரில் குறைந்தது 5 பேர் ஏதேனும் ஒரு வன்முறைக்கு ஆளாகிறார்கள். சட்டங்கள் கடுமையாக உள்ளபோது கூட யாரும் புகார் அளிக்கவே முன்வருவதில்லை. சட்டங்கள் இருப்பதை நிறைவேற்றுகிறோமா என்று எண்ணி பார்க்க வேண்டும் .
இதுவும் வன்முறை தான்
குழந்தைகளுக்கான விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஜாதி சரி என்று சொல்லி ஒரு குழந்தையை வளர்ப்பதும் ஒரு வன்முறை தான். குழந்தைக்கு சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். 50 வருடங்களுக்கு முன் இருந்த உரிமைகள், சமூக நீதியை இன்றைக்கு ஏற்றவாறு கட்டமைக்க வேண்டும்.
விழிப்புணர்வு தேவை
ஆசிரியர்கள் கல்லூரி மாணவர்கள், குழந்தைகளை அணுகுவது சுலபம். நீங்கள் அவர்களிடம் இருந்து வெகு தூரத்தில் இல்லை. அவர்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட உங்களுக்கு அதிகம். நீங்கள் இதுகுறித்து ஒரு குழு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயல வேண்டும்.
சுயமரியாதை
குழந்தைகளை அக்கறையோடு, கவனத்தோடு பார்க்கும்போது உங்களுக்குத் தெரிந்த குழந்தைகளிடம் மாற்றத்தை உணர்ந்தால் என்ன பிரச்சனை என்று பேசுங்கள். அவர்கள் நம்பி பேசும் ஆள் வேண்டும். இதை குறித்து விழிப்புணர்வு வேண்டும். குழந்தைகள் உரிமை அதிகம் பேசப்படாத விஷயமாக உள்ளது .குழந்தைகளும் சுயமரியாதையோடு வாழ வேண்டிய உரிமை உள்ளவர்கள் என்று தெரிவித்தார்.