ஆவேசமான முதல்வர்.. அவசரமாக வெளியேறிய வானதி சீனிவாசன்.. பெரிய முடிவை நோக்கி கடந்த பரபர நிமிடங்கள்!
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.. இந்த கூட்டத்தின் உள்ளே சென்று வீடியோ பதிவு செய்யவும், செய்தியை சேகரிக்கவும் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் உறுதியாக சில கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார். இவை அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால் மிக முக்கியமான முடிவு ஒன்றுடன் தமிழக அரசு தயாராகி வருவதாக பெரும் பரபரப்பு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் பாஜக மட்டும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

குழு அமைப்பு
இந்த நிலையில்தான் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட்தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது பற்றி ஆய்வு செய்வதற்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. அந்த குழு அளித்த அறிக்கையின் படி ஏழை எளியவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் நீட்தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதாக பரிந்துரை செய்யப்பட்டது.

நீட் மசோதா
இதையடுத்து தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இதுவரை மத்திய அரசுக்கு அந்த மசோதாவை ஆளுநர் அனுப்பி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான தோழமை கட்சிகளின் பிரதிநிதிகள் சென்று சந்திப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் உள்துறை அமைச்சர் சந்திப்புக்கு கால அவகாசம் தரவில்லை.

அனைத்து கட்சி கூட்டம்
இந்த நிலையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் டிசம்பர் 8ஆம் தேதி இன்று நடைபெறும் என்று நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டசபை இடம் பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் வானதி சீனிவாசன் இதில் பங்கேற்றார். ஆனால் கூட்டம் கூடிய சில நிமிடங்களில் அவர் வெளிநடப்பு செய்தார்.

ஸ்டாலின் ஆவசேம்
ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வால் பாதிப்பு ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசுகையில், நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தார். தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் நேற்று தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருக்கிறார். இவ்வாறு ஸ்டாலின் குற்றம் சாட்டி பேசினார்.
Recommended Video

ஏதோ நடக்குது என பேச்சு
ஒரு பக்கம் பத்திரிக்கையாளர்கள் வீடியோகிராபர்கள் யாருமே அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கபடவில்லை. இது வழக்கம்தான் என்றபோதிலும் கூட உள்ளே என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரம் இம்முறை ரொம்பவே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கதாக இருந்தது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக பேசிய நிலையில் பாஜக வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப்படும் அல்லது மத்திய அரசுக்கு எதிராக கடும் வார்த்தைகளுடன் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளது என்பது தெரிந்துதான் பாஜக வெளிநடப்பு செய்து விட்டதாக கூறப்பட்டது. அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால் உறுதியான திடமான ஒரு முடிவு வெளியாகும் என்று பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஏன் என்றால் நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தருவோம் என்பது திமுகவின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். எனவே இது கவுரவ பிரச்சினையாக திமுகவிற்கு மாறியுள்ளதால் இந்த கூட்டத்தின் முடிவு பற்றி பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் சட்டப்போராட்டம் நடைபெறும் என்றும், இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், சட்ட போராட்டம் என்பது வரும் வருடங்களுக்கானது என்றும் தெரிவித்தார். மேலும் உள்துறை அமைச்சரை மீண்டும் சந்திக்க முயற்சி செய்யப்படும் என்றார். எனவே பெரும் எதிர்பார்ப்பு சட்டென குறைந்துவிட்டது. நீட் தேர்வு விலக்கம் என்பது தொடர் முயற்சி என்பதுதான் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் சொன்ன பாடம்.












Click it and Unblock the Notifications