அன்ரிசர்வ் பெட்டிகள் குறைக்கப்படவில்லை.. ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்! தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைக்க இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. தெற்கு ரயில்வேயின் இந்த முடிவுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், பெட்டிகளை குறைப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று ரயில்வே அறிவித்திருக்கிறது.
இவை ஆதாரமற்ற தகவல்கள் என்றும், எனவே அவற்றை நம்ப வேண்டாம் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகிவரும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பயனடையும் வகையில் பிப்ரவரி மாதம் முதலே பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே சாா்பில் திட்டமிடப்பட்டது.
ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் தற்போது மகா கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், மகா கும்பமேளா பிப். 26-ஆம் தேதியுடன் நிறைவடைவதைத் தொடா்ந்து மாா்ச் மாதம் முதல் இந்தப் பெட்டிகள் தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக இணைக்கப்படும்.
கூடுதல் பெட்டிகள்: அந்த வகையில் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஆற்காடு விரைவு ரயிலிலும், ஹைதராபாத், நாகா்கோவில், திருவனந்தபுரம், ஆலப்புழை, மைசூரு, பாலக்காடு ஆகிய அதிவிரைவு ரயில்களிலும் மாா்ச் மாதத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு பொதுப் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன.
அதேபோல், புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில், திருநெல்வேலி - புருலியா அதிவிரைவு ரயில் உள்பட மொத்தம் 14 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இதன்மூலம் இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கும்" என்று கூறியிருக்கிறது.
முன்னதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில், "தெற்கு ரயில்வே, சுமார் 26 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்க உத்தரவிட்டிருக்கிறது. கடந்த பிப்.15ம் தேதி இது தொடர்பான உத்தரவு வெளியான நிலையில், பிப்.21 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. அதன்படி,
சென்னை-மைசூரு காவேரி எக்ஸ்பிரஸ்
சென்னை-திருவனந்தபுரம் மெயில்
சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா சூப்பர்ஃபாஸ்ட் (SF) எக்ஸ்பிரஸ்
கொச்சுவேலி-நிலம்பூர் சாலை ராஜா ராணி எக்ஸ்பிரஸ்
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்
ஆகிய ஐந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மொத்தம் 4 முன்பதிவில்லாத பெட்டிகள் இருக்கும். தற்போது இரண்டு குறைக்கப்பட்டால், இன்னும் இரண்டுதான் இருக்கும். மட்டுமல்லாது,
சென்னை-ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் டெக்கான் எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
புதுச்சேரி-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
விழுப்புரம்-காரக்பூர் எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் மற்றும்
திருநெல்வேலி-புருலியா எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
என இந்த 8 ரயில்களில் மொத்தம் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜோலார்பேட்டை தொடங்கி வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, வாலாஜா ரோடு, அரக்கோணம், சோளிங்கர், திருவள்ளூர் ஆகிய ஊர்களிலிருந்து மக்கள் தினமும் சென்னைக்கு அன்ரிசர்வ் பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், இந்த பெட்டிகளை குறைப்பதால் அவர்கள் ரிசர்வேஷன் பெட்டிகளில் ஏறுவார்கள், அங்குள்ள பயணிகளுக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்படும் என்று பலரும் எச்சரித்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு" என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில், தற்போது இதை தெற்கு ரயில்வே மறுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications