தமிழ்நாட்டில் 30-ம் தேதி முதல் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எந்தெந்த ரயில்கள்.. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் மூன்று சிறப்பு பயணிகள் ரயில்கள் வருகிற 30-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரளாவில் 2 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக தாக்கம் ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து பல மாதங்கள் முடங்கியது. இதனை தொடர்ந்து சாலை போக்குவரத்து சீரடைந்து அனைத்து மாநிலமும் பஸ்கள் இயக்கி வருகின்றன.
பல்வேறு நாடுகள் இந்தியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் விமான போக்குவரத்து ழுமையாக சீரடையவில்லை. இதேபோல் ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு வரப்பிரசாதம்
நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. ஒரு சில பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. சிறு நகரங்களுக்கு இடையே குறைந்த கட்டணத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இதனால் பயணிகள் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்று மக்கள் காத்திருந்தனர்.

தமிழக எம்.பி.க்கள் மனு
பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் முன்பதிவில்லாத பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்றும் ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகளை சேர்க்க வேண்டும் என்றும் தமிழக எம்.பிகள் சு.வெங்கடேசனும், கலாநிதி வீராச்சாமியும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள். இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு நாடு முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

5 பயணிகள் ரயில்கள்
இது தொடர்பாக மதுரை எம்.பி சு .வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 30-ந் தேதி முதல் முன்பதிவு இல்லாத 5 பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மொத்தம் 5 ரயில்களில் கேரளாவில் 2ரயில்களில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது எர்ணாகுளம்- கொல்லம், கன்னூர்- மங்களூரூ இடையேயான முன்பதிவு இல்லாத சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

மதுரை- செங்கோட்டை ரயில்
தமிழ்நாட்டை பொறுத்தவரை மதுரை-செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில், மயிலாடுதுறை-திருவாரூர்-மயிலாடுதுறை, திருச்சி-காரைக்கால்-திருச்சி ஆகிய ரயில்கள் 30-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து வருகிற 30-ந் தேதி முதல் காலை 7.10 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் காலை 10.35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் . மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.10 மணிக்கு மதுரை சென்றடையும்.

திருச்சி-காரைக்கால்
மயிலாடுதுறையில் இருந்து தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 6.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் காலை 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும். மறுமார்க்கமாக திருவாரூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். திருச்சியில் இருந்து 30-ந் தேதி முதல் காலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 10.45 மணிக்கு காரைக்கால் சென்றடையும். மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.15 மணிக்கு திருச்சி சென்றடையும்.












Click it and Unblock the Notifications