வடசென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. தெற்கு ரயில்வே கொடுத்த அப்டேட்!
சென்னை: வடசென்னை மக்களை சென்னையுடன் இணைப்பதில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில், இன்று முதல் கும்மிடிப்பூண்டி மற்றும் ஆவடிக்கு 2 புறநகர் ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
ஆவடிக்கும் - சென்னை சென்ட்ரலுக்கும் அடிக்கடி ரயில்கள் இருந்தாலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இருக்கின்றன. எனவே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கூடுதல் ரயில் வடசென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, "சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு 5-10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்ட்ரலிலிருந்து ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு புதியதாக 2 ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கு புதிய எண்ணும், புதிய நேர அட்டவணையும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்படி,
வண்டி எண்: 43006 / 43013 சென்ட்ரல்-ஆவடி வழித்தடத்தில் இயக்கப்படும். சென்ட்ரலிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும். மறு மார்க்கமாக ஆவடியிலிருந்து அதிகாலை 5.25க்கு புறப்படும்.
அதேபோல, வண்டி எண்: 42014 / 42035 சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும். மறு மார்க்கமாக சென்ட்ரலிலிருந்து அதிகாலை 10.35க்கு புறப்படும்.
ஆக இரண்டு வழித்தடத்தில் தலா 4 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆவடிக்கு பெரும்பாலும் மாநகர புறநகர் பேருந்துகள் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் கும்மிடிப்பூண்டிக்கு எனில் போதுமான அளவுக்கு பேருந்துகள் கிடையாது. எனவே இரவு தாமதமாக வேலையை முடித்துவிட்டு வருபவர்களுக்கு 10.35 கும்மிடிப்பூண்டி ரயில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி, திருவொற்றியூர், விம்கோ நகர், எண்ணூர், எர்ணாவூர் என வட சென்னை மக்களுக்கு இந்த ரயில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் வெவ்வேறு நாடுகளில் ரயில்வே இருந்தாலும், இந்திய ரயில்வே மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 15-20 கோடி மக்களை இந்தியன் ரயில்வே, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. டிக்கெட் விலை குறைவு, பயண நேரம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் ரயில் பயணங்களை அகதிகம் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல மத்திய அரசும் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது.
இருப்பினும் சமீப காலமாக ஏற்பட்டு வரும் விபத்துகள், ரயில்வே துறை மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications